`விஏஓவுக்கு லஞ்சம் கொடுக்கணும், பிச்சை போடுங்க!’ – தட்டுடன் வலம் வந்த கள்ளக்குறிச்சி விவசாயி

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம், எலவனாசூர்கோட்டை வருவாய் கிராமம், நொணைவாடி பகுதியைச் சேர்ந்த அப்துல் சலீம் ஷேக், பூர்வீகச் சொத்துப் பட்டாவில் தன்னுடைய பெயரை சேர்ப்பதற்காக எலவனாசூர்கோட்டை வருவாய் கிராம அலுவலகத்திற்குச் சென்றிருக்கிறார். அப்போது பட்டாவில் பெயர் சேர்ப்பதற்கு அங்கிருந்த வி.ஏ.ஓ, அவரிடம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அதையடுத்து, `பூர்வீகச் சொத்துப் பட்டாவில் என்னுடைய பெயரை சேர்க்க வி.ஏ.ஓ லஞ்சம் கேட்கிறார். அவருக்கு லஞ்சம் கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அதனால் உங்களால் முடிந்த பணத்தை பிச்சையாகப் போடுங்கள். இப்படிக்கு ஏமாந்த தமிழன்” என்ற வாசகங்கள் எழுதப்பட்ட அட்டையுடன், உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இன்று யாசகம் செய்தார். அதைக் கேட்ட பொதுமக்களும் தங்களால் முடிந்த தொகையை அவரது தட்டில் போட்டுவிட்டுச் சென்றனர்.

அப்துல் சலீம் ஷேக்கிடம் இது குறித்துக் கேட்டபோது, “வருவாய்த்துறையில் இருக்கும் ஒருசில அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்காமல் எந்த ஒரு வேலையையும் செய்வதில்லை. மக்களிடம் பிச்சையைப் போல லஞ்சம் வாங்குகிறார்கள். நான் ஒரு விவசாயி. நான் முறைகேடாக என் பெயரைச் சேர்க்கும்படி கூறவில்லை.

என்னுடைய பூர்வீகச் சொத்தில் என் பெயரை சேர்க்க வேண்டும் என்று உரிய சான்றிதழ்களை வைத்து மனு கொடுத்தேன். அதற்குத்தான் வி.ஏ.ஓ அசோக் குமார் என்னிடம் லஞ்சம் கேட்டார். அவர் லஞ்சம் கேட்ட ஆடியோ என்னிடம் இருக்கிறது. ஆனால், `உன்னால் என்ன செய்ய முடியுமோ செய். யாரிடம் போகனுமோ போ’ என்று தைரியமாகச் சொல்கிறார். அதனால் வேறு வழியின்றி அவருக்கு லஞ்சம் கொடுக்க பிச்சை எடுக்கிறேன்” என்றார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *