Cricket
oi-Yogeshwaran Moorthi
மும்பை: சிஎஸ்கே அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை ஃபிரான்சைஸ் கிரிக்கெட்டில் மட்டுமே பயிற்சியாளராக பணியாற்றி வந்த பிளமிங், தற்போது தேசிய அணியின் பயிற்சியாளராக செயல்பட இருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளாக சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டவர் ஸ்டீபன் பிளமிங். தோனிக்கு மிகச்சிறந்த ஆசானாக இருந்து சிஎஸ்கே அணி உச்சத்தை எட்ட காரணமாக அமைந்தார். அதேபோல் தோனி – ஸ்டீபன் பிளிமிங் கூட்டணி ஐபிஎல் தொடரில் பல்வேறு உயரத்தை எட்டின. சிஎஸ்கே அணியின் இந்த ஸ்டைல் மற்ற அணிகளுக்கும் ஒரு ரோல் மாடலாக அமைந்தது.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை. இதனால் ரசிகர்கள் மத்தியில் பிளமிங் மீது கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது. ஆனால் மேஜர் லீக் தொடரில் டிஎஸ்கே அணி அடைந்த தோல்விக்கு பின், சிஎஸ்கே மற்றும் பிளமிங் இடையிலான உறவு முடிவுக்கு வந்தது.
இதனால் சிஎஸ்கே அணியின் புதிய பயிற்சியாளராக யார் நியமனம் செய்யப்படுவர் என்ற கேள்விகள் எழுந்தன. அதேபோல் ஸ்டீபன் பிளமிங்கின் அடுத்த திட்டம் என்னவாக இருக்கும் என்றும் பேச்சுகள் எழுந்தன. இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை இங்கிலாந்து ஊடகங்களும் உறுதி செய்துள்ளன. அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து ஜாம்பவான் பீட்டர்சனும் வரவேற்றுள்ளார். அண்மையில் இங்கிலாந்து டெஸ்ட் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து பிரண்டன் மெக்கல்லம் நீக்கப்பட்டார். அந்த பொறுப்புக்கு ஸ்டீபன் பிளமிங் கொண்டு வரப்பட்டு இருக்கிறார். இங்கிலாந்து அணி நிர்வாகம் வழக்கமாக நியூசிலாந்து வீரர்களை அதிகமாகவே நம்பும்.
ஏனென்றால் இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்து வீரர்கள் எப்போதும் சிறப்பாக விளையாடுவார்கள். அதேபோல் நியூசிலாந்து வீரர்கள் கவுண்டி அணிகளிலும் இருப்பார்கள். இதனால் ஸ்டீபன் பிளமிங்கின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அவரின் பயிற்சியின் கீழ் இங்கிலாந்து அணி எப்படி செயல்படும் என்பதும் விவாதமாக உள்ளது.

