இதுதான் முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட கடல்சார் வேளாண்மை! – தொல்லியர் அறிஞர் ராஜேஷ்! | “This is the very first instance of marine agriculture ever undertaken!” — Archaeologist Rajesh

Spread the love

தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் என்ற மீனவ கிராமத்தின் அருகே அமைந்துள்ளது பட்டினமருதூர் மற்றும் பனையூர் பகுதிகள். தமிழக அரசால் தொல்லியல் தளமாக அறிவிக்கப்பட்ட பட்டினமருதூருக்கு அருகே உள்ள பனையூரில் நீர் மற்றும் நிலப்பரப்பு அடியில் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் கண்டறியப்பட்டிருந்தது. எனவே இப்பகுதியில் விலங்கியல் மற்றும் புவியியல் ஆய்வாளர்கள் ஆய்வு நடத்த வேண்டும் என்று தொல்லியல் ஆய்வாளர் ராஜேஷின் கோரிக்கைக்கு ஏற்ப, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் பரிந்துரையில் இங்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாய்வில் அரிய வகை சிப்பிகளும் கிடைத்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ராஜேஷிடம் பேசும் போது,

” பட்டினமருதூர் மற்றும் பனையூர் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட கடல் சார் புதைபடிமங்கள் (Marine Fossils) நவீன ஆய்வகச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது, ZSI அறிக்கையின்படி இப்புதைபடிமங்கள் 8000-12,000 ஆண்டுகள் பழமையானவை என்றும், புவியியல் ரீதியாக இவை ஹோலோசின் காலகட்டத்தைச் சேர்ந்தவை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹோலோசின் காலம் என்பது தமிழ்நாட்டு கடற்கரையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க கடலோரப் பரிணாம வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டம். மேலும் திட்டமிடப்பட்ட நீர் மேலாண்மை கீழ் இவ்விடம் இருந்திருப்பதையும் அறிய முடிகிறது. நில அடுக்கு ஆய்வின் மூலம் கடல்மட்ட உயர்வுக்கு முந்தைய ஒரு செழுமையான நாகரீகத்தின் எச்சங்கள் இவை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

27.58% தங்கம், 47.85% செம்பு, 1.69% வெள்ளி மற்றும் 22.88% இரும்பு அல்லாத உலோகங்கள் உலோகவியல் அறிவின் உச்சத்தை உணர்த்துகிறது. மேலும் சேர, சோழர், பாண்டியர் காலத்து நாணயங்கள் தொடர் வரலாற்றின் நீட்சியை உணர்த்தும் அறிவியல் சான்றுகள். மேலும், பீங்கான் பாத்திரங்களின் சிதைவுகள் இப்பகுதியில் மேம்பட்ட வணிக நாகரிகத்தின் தொடர்பையும், மட்பாண்டங்களின் சிதைவுகள் இப்பகுதியின் பழங்கால நாகரிகத்தின் அடையாளங்களையும் பறைசாற்றுகிறது.

பழங்காலக் கிணறுகள், குமிழ் தூம்புகள், சுடுமண் குழாய்கள் மற்றும் நீர் வழித்தட ‘ப’ வடிவ அமைப்புகள் ஆகியவை மேம்படுத்தப்பட்ட நாகரிகத்தின் அடையாளங்கள். காலப்போக்கில் இவ்விடம் கடல்மட்ட உயர்வால் சிதைந்தாலும் மண்ணுக்குள் புதைந்துள்ள புதைபடிமங்கள் உண்மையை உரக்கச் சொல்கின்றன.

பாகவதம் குறிப்பிடும் ‘வாரிதுர்க்கம்’ (நீர்க்கோட்டை) போன்ற அமைப்பே ‘பாதுகாக்கப்பட்ட கழனி’ கடலில் இருந்து நிலத்தை மீட்கும் தொழில்நுட்பம் 12,000 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறையில் இருந்திருக்கிறது. நவீன நாகரிகத்திற்கு முந்தைய முன்னோடி நாகரீகமாக நாம் இதைச் சொல்லலாம்.

தமிழரின் தனித்துவ தொழில்நுட்பம் பற்றி சங்க இலக்கியங்களில் குறிப்பாக மதுரைக்காஞ்சி கூறும் ‘முத்துவிளை கழனி முந்நீர் வரைப்பில்’ என்பது தற்செயலான உருவாக்கம் அல்ல. ஆறு, நிலம், கடல் நீரை முறைப்படுத்தி முந்நீர் என முத்துச்சிப்பிகள் வளர ஏற்ற, மிதமான உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலையோடு செயற்கையான சூழலை அக்காலத்திலேயே நம் தமிழர்கள் உருவாக்கியுள்ளனர். எனவே இது ஒரு மாஸ்டர்பீஸ் சான்று என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த தீவுகள் இல்லாத இடத்தில் கால்வாயின் நீளத்தை இருமடங்காக அதிகரித்து வளைவு பாதையை உருவாக்கியது உலகத்தரமான நீரோட்டவியல் அறிவு. இதன்மூலமே சிப்பிகள் சிதையாமல் முத்துக்கள் விளையும் நிசப்தமான நீர்ச்சூழலை உருவாக்க முடியும். இவை தற்செயலானவை அல்ல. ‘மகா நாகரீகத்தின்’ நேரடி ஆதாரம் இந்த பாதுகாக்கப்பட்ட சூழலில் வாழ்ந்த உயிரினங்களின் எச்சங்களே. இதுவே உலகில் முதன் முதலில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் வேளாண்மை” என்று விளக்கினார் ராஜேஷ்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *