சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு, பல்வேறு அரசு துறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சில திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதுடன், போக்குவரத்துத் துறையிலும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழைய பேருந்து கொள்முதல் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய பேருந்துகளை வாங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய பேருந்துகள் த.வெ.க. கொடி வண்ணங்களில் வர்ணம் பூசப்பட்ட புகைப்படங்களும் அண்மையில் இணையத்தில் பரவின.
இந்த நிலையில், பயணிகள் அரசுப் பேருந்துகளுக்கான முன்பதிவு செய்யப் பயன்படுத்தும் TNSTC செயலிக்கும் புதிய தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. செயலியின் முகப்புப் பகுதியில் இடதுபுறம் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படமும், வலதுபுறம் போக்குவரத்துக் கழகத்தின் சின்னமும் இடம்பெற்றுள்ளன.
இந்த மாற்றம் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சி நிறங்களை அரசு செயலியில் பயன்படுத்துவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது மஞ்சள் பின்னணியில் இடம்பெற்றுள்ள எழுத்துகள் தெளிவாகத் தெரியவில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், அரசின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைப்பு மாற்றப்பட்டுள்ளதாக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.
ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு அரசு துறைகளின் காட்சி அடையாளங்களில் மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் குறித்து ஆதரவும் எதிர்ப்பும் தொடரும் நிலையில், TNSTC செயலியின் புதிய வடிவமைப்பும் தற்போது அரசியல் விவாதத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.

