மும்பை: 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்து விபத்து; 9 பேர் உள்ளே சிக்கி உயிரிழந்த சோகம்!

Spread the love

மும்பை அருகில் உள்ள பீவாண்டி என்ற இடத்தில் 4 மாடிகள் கொண்ட கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. ஏற்கெனவே பீவாண்டி மாநகராட்சியால் ஆபாயகரமான கட்டடம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த வாரம் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் அக்கட்டடம் நேற்று நள்ளிரவில் இடிந்து விழுந்தது. இதையடுத்து தேசிய பேரிடர் மீட்புப் படை, உள்ளூர் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டன. மோப்ப நாய் படை, நான்கு தீயணைப்பு வாகனங்கள், இரண்டு ஆம்புலன்ஸ்கள் மற்றும் கனரக மண் அகற்றும் இயந்திரங்கள் ஆகியவை மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இடிபாடுகளில் இருந்து 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 6 பேர் உயிரோடு மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இடிபாடுகளில் மேலும் பலர் சிக்கி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி காயமடைந்த மேலும் மூன்று பேர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்தனர்.

மீட்பு பணி

இடிந்து விழுந்த கட்டடத்தில் வசிக்கும் சாகுல் ஹமீத் என்பவர் சம்பவம் குறித்து கூறுகையில், “கட்டடம் இடிந்து விழுவதற்கு முன்பு மிகப்பெரிய சத்தம் கேட்டது. சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து கட்டடத்தில் வசித்த பல குடும்பங்கள் அங்கிருந்து காலி செய்துவிட்டன. மேலும் சிலர் வீட்டை காலி செய்ய தயாராகிக்கொண்டிருந்தபோது கட்டடம் இடிந்து விழுந்தது” என்று தெரிவித்தார்.

கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பது குறித்து கேள்விப்பட்டு மாநகராட்சி துணை கமிஷனர் அர்விந்த் நேரில் வந்து பார்வையிட்டார். இது குறித்து அர்விந்த் கூறுகையில், ”நாங்கள் அங்கு சென்றபோது, ​​அந்தக் கட்டடம் விரிசல் அடைந்து கொண்டிருப்பதைக் கண்டோம். எங்கள் குழுவுடன் உள்ளே சென்று அங்கிருந்தவர்களை வெளியேற்றினோம். வெளியேறுமாறு கேட்டுக்கொண்டதும் பெரும்பாலான குடியிருப்பாளர்கள் வெளியே வந்துவிட்டனர்; இருப்பினும், சில பெண்கள் தாங்கள் சாப்பிட்டுவிட்டுப் பிறகு வருவதாக ஆரம்பத்தில் கூறினர்.

ஏறக்குறைய பத்து ஆண்டுகளே பழைமையானதாகக் கருதப்படும் அந்தக் கட்டடத்தில், பழுதுபார்ப்புப் பணிகள் நடைபெற்று வந்தன. குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வெளியே வரவில்லை. நாங்கள் வெளியே வந்த சில நிமிடங்களிலேயே அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தது” என்று அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து இடிந்து விழுந்த கட்டடத்தில் வசித்த அபய் குமார் யாதவ் கூறுகையில், “நானும் எனது குடும்பத்தினரும் இரவு உணவை முடித்துக் கொண்டிருந்தபோது, ​​கட்டடத்தில் இருந்து பலத்த சத்தம் கேட்டது. இரவு உணவுக்குப் பிறகு நாங்கள் எங்கள் அறைக்குள் இருந்தோம். அப்போது பலத்த சத்தம் கேட்டது. நாங்கள் உடனடியாக வெளியே ஓட முயற்சித்தோம், ஆனால் தப்பிக்க வழி இல்லை. அதனால் நான் முதல் மாடியில் இருந்து குதித்தேன். விழுந்ததில் தனக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது” என்று கூறினார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *