இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 503 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. தேவ்தத் படிக்கல் 117 ரன்களும், துருவ் ஜூரல் 115 ரன்களும் எடுத்து சதம் விளாசினர். ரிஷப் பண்ட் 63 ரன்களும், சுப்மன் கில் 50 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 290 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்காக சோனல் தினுஷா 103 ரன்கள் எடுத்து போராடினார். இதனால் இலங்கை அணிக்கு பாலோ-ஆன் வழங்கப்பட்டது.
இரண்டாவது இன்னிங்சில் இலங்கை வீரர்கள் தொடக்கத்தில் தடுமாறிய போதிலும், சோனல் தினுஷா மீண்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மறுமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், நிதானமாக விளையாடிய அவர் சதம் கடந்து அணியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
7வது விக்கெட்டுக்கு கேஷரா நுவந்தாவுடன் இணைந்து முக்கியமான கூட்டணியை அமைத்த தினுஷா, பின்னர் லஹிரு குமாராவுடனும் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தினுஷாவின் உறுதியான ஆட்டம் போட்டியின் போக்கையே மாற்றியது.
ஒரு கட்டத்தில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 400 ரன்களைக் கடந்தது. இந்தியாவின் வெற்றிப் பயணத்தை தாமதப்படுத்திய சோனல் தினுஷா, கடைசி நாளில் இலங்கை அணியின் முக்கிய தூணாக நின்று கவனம் ஈர்த்தார்.

