விலை குறையும் நேரத்தில் தக்காளியை அப்படியே விற்பனை செய்ய முடியவில்லை என்றால், அதை வேறு பொருளாக மாற்றிப் பயன்படுத்துவது ஒரு சிறந்த வழியாக இருக்கலாம்.
தக்காளியிலிருந்து பியூரி, பேஸ்ட், ஜாம், சாஸ், கெட்சப், ஊறுகாய், சூப் பவுடர் போன்ற பல பொருள்களைத் தயாரிக்க முடியும். இவ்வாறு மதிப்புக்கூட்டல் செய்வதன் மூலம், தக்காளி வீணாவதைத் தடுத்து, அதை 6 முதல் 7 மாதங்கள் வரை பயன்படுத்தும் வகையில் மாற்ற முடியும்.
இதில் விவசாயிகள் தனித்தனியாகச் செயல்படுவதைக் காட்டிலும், FPO (Farmer Producer Organization) மூலம் ஒன்றிணைந்து மதிப்புக்கூட்டல் யூனிட்களை அமைப்பது பயனுள்ளதாக இருக்கும்.
இதற்காக அரசின் நிதியுதவிகளைப் பயன்படுத்தி, குளிர்சாதனச் சேமிப்பு மற்றும் மதிப்புக்கூட்டல் வசதிகளை ஏற்படுத்திக்கொண்டால் விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்குக் கூடுதல் மதிப்பைப் பெற முடியும்.
வீணாகும் தக்காளிக்கும் மதிப்பு இருக்கிறது!
விலை வீழ்ச்சியாலோ அழுகிப்போயோ ரோட்டிலும் குப்பையிலும் கொட்டப்படும் தக்காளி, உண்மையிலேயே முழுமையாக வீணானது கிடையாது; அதற்குள்ளே ஒரு பெரிய பிசினஸ் வாய்ப்பும் மருத்துவக் குணமும் ஒளிந்திருக்கிறது.
தக்காளியின் தோலில் ‘லைகோபீன்’ (Lycopene) என்கிற மிகச் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டும், சிவப்பு நிறத்தைத் தரும் இயற்கை நிறமியும் (Natural Colorant) இருக்கிறது.
உணவு மற்றும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், இப்படி வீணாகும் தக்காளிகளைச் சேகரித்து, அதிலிருந்து லைகோபீன் மற்றும் இயற்கை நிறமிகளைப் பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினால், தக்காளி குப்பைக்குப் போவதும் தடுக்கப்படும்; விவசாயிகளுக்கும் நஷ்டம் குறையும்; தொழிற்சாலைகளுக்கும் நல்ல வருமானம் கிடைக்கும்.