International
oi-Nantha Kumar R
டெஹ்ரான்: ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தொடங்கி போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக திறக்கப்பட்டு கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. இதனால் நம் நாட்டில் பெட்ரோல், டீசல், கேஸ் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது புதிய பிரச்சனை உருவாகியுள்ளது. இதனால் மீண்டும் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அப்படி என்ன பிரச்சனை? வாங்க பார்க்கலாம்.
அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் சேர்ந்து ஈரான் மீது பிப்ரவரி 28 ம் தேதி போரை தொடங்கியது. இதனால் ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியது. இதனால் கப்பல்களின் போக்குவரத்து 92 சதவீதம் வரை சரிந்தது.

மேலும் உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடந்து வருகிறது. இதனால் நம்நாடு மட்டுமின்றி சீனா உள்பட பல்வேறு ஆசிய நாடுகள் பாதிக்கப்பட்டன. கச்சா எண்ணெய், கேஸ் சப்ளை பாதிக்கப்பட்டது.
தற்போது போர் எல்லாம் முடிந்து அமெரிக்கா – ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் இனி ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டு கப்பல்களின் போக்குவரத்து தொடங்கி இருந்தாலும் கூட தற்போது புதிய பிரச்சனை உருவாகி உள்ளது.
அது என்னவென்றால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள கப்பல்களின் எண்ணிக்கை மிகக்குறைவாகவே உள்ளது. இதனால் கப்பல்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இது கப்பல்களுக்கான வாடகை பணத்தை அதிகரித்துள்ளது. ஒருவரியில் சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்கு போதிய கப்பல்கள் இல்லை. இதனால் கப்பல்களுக்கான முன்பதிவு கட்டணம் அதிகரித்துள்ளது. வழக்கமான கட்டணத்தை விட கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு வரை கட்டணம் உயர்ந்துள்ளது.
பாரசீக வளைகுடாவில் இருந்து இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் கொண்டு வருவதற்காக, சுமார் 20 லட்சம் பேரல் கொள்ளளவு கொண்ட பெரிய கப்பல் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போர் நடந்த சமயத்தில் கூட இல்லாத ஒன்றாகும். மத்திய கிழக்கு கடல் பகுதிகளில் பதற்றங்கள் தணிந்து வருவதாக கூறப்பட்டாலும் கூட கப்பல்களின் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கப்பல்கள் இல்லாத நிலை உருவாகி உள்ளது. போர் முடிந்துவிட்டது. ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்பட்டுள்ளது. இனி வளைகுடா நாடுகளிடம் இருந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்ற நிலை உருவான நிலையில் இபு்படியான பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
போர் பதற்றம் காரணமாக இந்த வளைகுடா பிராந்தியத்தில் இருந்த கப்பல்கள் வெளியேறிவிட்டன. போர் முடிவடைந்த பிறகு ஒரு வாரத்திற்குள் ஓமன் வளைகுடாவை 65 காலி கப்பல்கள் மட்டுமே சென்றன. இதில் 25 கப்பல்கள் சினோகோர் என்ற ஒரே நிறுவனத்திற்கு சொந்தமானவை. கப்பல்களுக்கான தேவை அதன் விநியோகத்தை விட அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு நாடுகளும் கப்பல் வாடகைக்கு அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டியுள்ளது.
இந்த கப்பல் தட்டுப்பாடு மற்றும் கட்டண உயர்வு நேரடியாக மக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். இது நம் நாட்டிற்கான கச்சா எண்ணெய் சப்ளையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதில் பிரச்சனை ஏற்படுத்தலாம். இதனால் பெட்ரோல், டீசல் கையிருப்பை அதிகரிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு தற்காலிக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் தாராளமாகக் கிடைத்தாலும், அதைக் கொண்டு செல்வதற்கு போதுமான கப்பல்கள் அங்கு இல்லை என்பது புதிய தலைவலியாக மாறி உள்ளது.
இதனால் கப்பல் தட்டுப்பாடு நீடிக்கும் வரை இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு உடனடி நிவாரணம் கிடைப்பது கடினம். வரும் வாரங்களில் கப்பல் போக்குவரத்து சீரானால், இந்தியாவின் இறக்குமதி செலவு குறைந்து, இந்திய ரூபாய் சர்வதேச சந்தையில் வலுவடையும், பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் தற்போது வரை பிரச்சனை உள்ளது.