International
oi-Halley Karthik
பெய்ஜிங்: திபெத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவே, சீனா உலகின் மிகப்பெரிய அணையை கட்டி வருகிறது. எல்லாம் ஒகேதான்.. ஆனால் சீனா பொருட்கள் என்றாலே அதுக்கு வாரண்டி கிடையாதே! எனவே எப்போது வேண்டுமானலும் அந்த அணை உடைந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும், இது டைம் பாம் போன்றது என்றும் அச்சம் எழுந்திருக்கிறது.
சீனா கட்டி வரும் அணையின் பெயர் ‘மெடோக்’! பிரச்சனை என்னவெனில் இந்த அணை அமைந்துள்ள பகுதி, நிலநடுக்க மண்டலத்தில் இருக்கிறது என்பதுதான். அதாவது எப்போது வேண்டுமானாலும் இங்கு நிலநடுக்கம் ஏற்படலாம். இதை இந்திய ஊடகங்கள் சொல்லவில்லை.. மாறாக சீன அரசின் ஆய்வறிக்கையே கூறியிருக்கிறது.

சீன புவியியல் மையத்தின் மேற்பார்வையில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் அணைக்கு கீழே பைஜன் எனப்படும் செயல்படும் நிலத்தடி பிளவு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. செயல்படும் நிலத்தடி பிளவு எனில், இது எப்போது வேண்டுமானாலும் நகரலாம். இதனால் நிலநடுக்கம் உருவாகும் அல்லது நிலச்சரிவு உருவாகும். சீனா கட்டும் அணை.. அது உடைந்தால் என்ன? என்று நமக்கு தோன்றலாம்.. விஷயம் நாம் நினைப்பதை விட ரொம்ப சீரியஸ்.
ஏனெனில், இந்த அணை அருணாச்சலப்பிரதேசத்திலிருந்து வெறும் 50 கி.மீ தூரத்தில் இருக்கிறது என்பதுதான். இந்த அணை உடைந்தால்.. அது இந்தியாவின் நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும். ரூ.11 லட்சம் கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த அணை, 60,000 மெகாவாட் மின்சாரத்தை உருவாக்கும் திறன் கொண்டதாகும். தற்போது உலகின் மிகப்பெரிய அணையாக இருக்கும் சீனாவின் திரீ கோர்ஜஸை விட, மொடேக் அணை 3 மடங்கு பெரியதாகும்.
இவ்வளவு பெரிய அணை, இமயமலைக்கு பக்கத்தில் அடிக்கடி நில அதிர்வு ஏற்படும் இடத்தில் இருப்பது என்பது, டைம் பாம் போன்றது என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். பேரழிவை தடுக்க வேண்டும் எனில், அணையை கட்டுவதை தடுக்க வேண்டும். அது முடியாத பட்சத்தில்.. அணையின் சரிவுகளை வலுப்படுத்தவும், கூடுதலாக பாதுகாப்பு கட்டமைப்புகளை உருவாக்கவும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இந்த அணை பிரம்மபுத்திரா நதியின் நீரோட்டத்தை கட்டுப்படுத்தக்கூடும் என்கிற அச்சம் ஏற்கெனவே இந்தியாவுக்கு இருக்கிறது. இப்படி இருக்கையில், தற்போது நிலநடுக்கம் குறித்த சீனாவின் ஆய்வறிக்கை இந்தியாவுக்கு புதிய அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.