International
-Nantha Kumar R
பாரீஸ்: ”பிரதமராக நரேந்திர மோடி பதவியில் இருக்கும் வரை இந்தியா மீது யாராவது தாக்குதல் நடத்தினால் நாங்கள் இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்குவோம்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிற நாடுகளுக்கு வார்னிங் செய்துள்ளார். பிரான்சின் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உடனான சந்திப்பின்போது டொனால்ட் டிரம்ப் இதனை தெரிவித்தார்.

ஜி7 அமைப்பில் பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி, கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன. இந்த அமைப்பில் நம் நாடு உறுப்பினராக இல்லை. இந்நிலையில் தான் ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டுக்கு பிரான்ஸ் தலைமையேற்றது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையேற்றார். பிரான்ஸ் நகரில் நேற்று தொடங்கிய ஜி7 நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். நம் நாடு உறுப்பு நாடாக இல்லாவிட்டாலும் கூட பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
பிரான்சின் எவியன்-லெஸ்-பெய்ன்ஸ் (Evian-les-Bains) நகரில் இன்று ஜி7 மாநாட்டின் 2வது நாள் அமர்வு நடந்தது. இன்று பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது இருதலைவர்களும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்தனர். இந்த சந்திப்பின்போது பிரதமராக நரேந்திர மோடி இருக்கும் வரை இந்தியாவை யாராவது தாக்கினால் அவர்களை எதிர்த்தும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் நாங்கள் வருவோம் என்று உறுதியாக கூறினார்.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் கூறியதாவது: ” பிரதமர் நரேந்திர மோடி பதவியில் இருக்கும் வரை இந்தியா மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக களம் இறங்கும். அதேவேளையில் இந்தியாவின் புதிய தலைவராக யாரும் வந்தால் நாங்கள் அப்படி செய்வோமா என்பது எனக்கு உறுதியாக தெரியாது” என்றார். டிரம்ப் இப்படி சொன்னது அனைவருக்கும் சிரிப்பை ஏற்படுத்தியது. டிரம்ப், மோடியும் சிரித்தனர்.
மேலும் டிரம்ப் தொடர்ந்து பேசுகையில், ”ஏனென்றால் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே சிறந்த உறவு உள்ளது. பிற நாடுகளுடனான உறவு எங்களை விட நெருக்கமாக இருக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால் நானும் அவரும், எங்களின் இருநாடுகளும் நல்ல நட்பில் உள்ளது. இது உண்மையில் எங்களின் இருவரிடம் இருந்து துவங்குகிறது” என்றார்.
அதேபோல், ”மோடி வர்த்தக பேச்சுவார்த்தையில் கடினமான நபராக இருக்கிறார். அவரது தலைமை பண்பு மற்றும் பேச்சுவார்த்தை நடத்தும் திறமை பாராட்டுக்குரியதாக உள்ளது. பிரதமர் மோடியின் கீழ் இந்தியா தொடர்ந்து செழித்து வளரும். அவர் தலைவராக இருக்கும் வரை இந்தியா மிகச்சிறப்பாக செயல்படும்” என்று கூறினார்.