த.வெ.க-விடம் தற்போது எம்.பி.க்கள் யாரும் இல்லை என்பதும், தமிழ்நாட்டில் தங்களுக்குக் கிடைத்த ஒரே ஒரு ராஜ்யசபா எம்.பி பதவியிடத்தையும் அவர்கள் தங்களின் கூட்டாளியான காங்கிரஸுக்கே விட்டுக் கொடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மறுபுறம், இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாக இருந்த தி.மு.க, இந்த டெல்லி கூட்டத்தைப் புறக்கணிக்க முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி தங்களை விடுத்து விஜய்யின் த.வெ.க-வுடன் கைகோத்து கூட்டணி ஆட்சி அமைத்ததை “முதுகில் குத்திய துரோகம்” என விமர்சித்துள்ள தி.மு.க, இந்தியா கூட்டணியில் இருந்து முற்றிலுமாக வெளியேறுவதாகவும், இனி அதன் எந்தவொரு கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தை புறக்கணித்த திமுக-வை விமர்சித்த, மதுரை மத்திய தொகுதி த.வெ.க எம்.எல்.ஏ. வி.எம்.எஸ். முஸ்தபா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தி.மு.க ஏன் இந்த நாடகத்தை ஆடுகிறது? ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் அவர்கள் என்ன ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்? மத்திய பா.ஜ.க அமைச்சரவையில் என்னென்ன பதவிகளைக் கேட்கிறார்கள்? தி.மு.க இப்போது ஆர்.எஸ்.எஸ்-சின் கையாள் என்பது அம்பலமாகிவிட்டது” என்று சாடினார்.