India
oi-Nantha Kumar R
ஜம்மு காஷ்மீர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த 22 வயது இளைஞருக்கும், ஜம்மு காஷ்மீரின் இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. இதையடுத்து காதலியுடன் வாழ அந்த இளைஞர் சட்டவிரோதமாக எல்லையை கடந்து இந்தியா நுழைந்தபோது ராணுவத்திடம் சிக்கினார். ராணுவம் அவரிடம் தீவிர விசாரணை நடத்திய நிலையில் இளைஞரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி அந்த இளம்பெண் கெஞ்சியதும், அதன்பிறகு ராணுவம் செய்த செயல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்தவர் ஜிஷன் மிர் (வயது 22). இவருக்கும் ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம் துல்வாரி கிராமத்தை சேர்ந்த இரும் பானு என்ற இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளம் ஒன்றின் மூலமாக பழக்கம் ஏற்பட்டது. இருவரும் முதலில் நண்பர்களாக பழகினர்.

அதன்பிறகு தான் ஜிஷன் மிர்-ரின் மூதாதையர்கள் இந்தியாவை சேர்ந்தவர் என்பதும், அவர்கள் இரும் பானு வசித்து வரும் துல்வாரி கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனால் இருவருக்கும் இடையேயான உறவு இன்னும் வலுவானது. நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் காதலிக்க தொடங்கினர்.
ஜிஷன் மிர்-ரை எடுத்து கொண்டால் அவர் வேலைக்கு செல்லாமல் இருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் அவரை திட்டி தீர்த்தனர். வேலைக்கு சென்று தங்களின் குடும்ப பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். ஆனால் அவருக்கு வேலைக்கு செல்ல விரும்பவில்லை.
இதனால் ஜிஷன் மிர் மன உளைச்சலுக்கு ஆளானார். இதுபற்றி அவர் தனது காதலி இரும் பானுவிடம் கூறினார். அப்போது அவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவிற்கு வந்து விடும்படி கூறினார். சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்தால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதால் இருவருக்கும் பயம் ஏற்பட்டது. இதுபற்றி விவாதித்தபோது அவர்கள் மாற்று திட்டத்தை கையில் எடுத்தனர்.
அதன்படி ஜிஷன் மிர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து எல்லை தாண்டி இந்தியா வந்த பிறகு ராணுவத்திடம் சரணடைய வேண்டும். காதல் விவகாரம் பற்றி எடுத்து கூற வேண்டும். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்படுவார். அதன்பிறகு மூதாதையர்களின் கிராமத்தை கூறி இங்கே தங்கலாம் என்று ஐடியா செய்தனர். இதன்மூலம் பயங்கரவாதி என முத்திரை குத்தப்படுவதில் இருந்து எளிதில் தப்பலாம் என்று ஜிஷன் மிர் நினைத்தார்.
இதையடுத்து கடந்த மே மாதம் 31ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து உரி செக்டார் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி ஜிஷன் மிர் இந்தியாவிற்குள் நுழைந்தார். அவரை நம் நாட்டின் ராணுவம் கைது செய்தது. அப்போது காதல் விவகாரம் பற்றியும், இருவரும் போட்ட திட்டம் பற்றியும் எடுத்து கூறினார். இதையடுத்து ராணுவம் சார்பில் ஜிஷன் மிர்-ரின் காதலில் இரும் பானுவிற்கு சம்மன் வழங்கி விசாரணை நடத்தியது. அப்போது அவரும் காதலிப்பதையும், இருவரும் சேர்ந்து திட்டமிட்டதையும் ஒப்புக்கொண்டனர்.
இருப்பினும் ராணுவத்துக்கு ஜிஷன் மிர் மீது சந்தேகம் எழுந்தது. அவரை பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது பின்னணியில் எந்த பயங்கரவாத இயக்கமும், பாகிஸ்தான் உளவு அமைப்பும் இல்லாததும், அவர் தனது காதலிக்காகவே எல்லை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்ததும் தெரியவந்தது. ஆனாலும்அவர் சட்டவிரோதமாக நம் நாட்டில் தங்க முடியாது.
இதனால் அவருக்கு வார்னிங் செய்து பாகிஸ்தானுக்கே அனுப்ப திட்டமிட்டனர். காதலி இரும் பானு எப்படியாவது தங்களை இந்தியாவில் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று கெஞ்சியும் ராணுவம் மறுத்துவிட்டது. இதையடுத்து ஜிஷன் மிர் முறைப்படி பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.