International
oi-Halley Karthik
பாரிஸ்: பிரான்ஸில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா குறித்தும் ஒட்டுமொத்த தெற்காசிய நாடுகள் குறித்தும் பேசியிருந்தது கவனம் பெற்றிருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் கனடா என வளர்ந்த 7 நாடுகளின் கூட்டமைப்பைதான் ஜி7 நாடுகள். இந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஒன்றுகூடி, உலகத்தின் வளர்ச்சி, பொருளாதாரம் எங்கு பலமாக இருக்கிறது? என்று கலந்தாலோசனை செய்வார்கள். இந்த நிகழ்வு ஜி7 உச்சி மாநாடு என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு, இந்த மாநாட்டிற்கு இந்தியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் பிரதமர் மோடி பங்கேற்றிருந்தார். இந்நிலையில் இந்த மாநாட்டில் அவர் பேசியது, சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
உலகம் தற்போது நம்பிக்கை பற்றாக்குறையை எதிர் கொண்டிருப்பதாக குறிப்பிட்ட மோடி, சர்வதேச நாடுகளுக்கு இடையில் எதிர்காலத்தில் ஒற்றுமையும், அமைதியும் உருவாக வேண்டும் எனில், அந்த நாடுகளுக்கு இடையில் நம்பிக்கை உருவாக வேண்டும். நம்பிக்கையில்தான் எல்லாம் அடங்கியிருக்கிறது என்று கூறியுள்ளார். அதேபோல, பொருளாதார வளர்ச்சி குறித்தும் மோடி பேசியிருந்தார்.
உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஜிடிபி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஓகேதான். ஆனால், உண்மையான வளர்ச்சி என்பது மனிதனை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும் என்று மோடி கூறியிருக்கிறார்.
மேலும் செயற்கை நுண்ணறிவு(AI) தொழில்நுட்பங்கள் சர்வதேச அளவில் நாடுகளை ஒருங்கிணைப்பதற்கும், ஒற்றுமைக்கும்தான் உதவ வேண்டும். இதற்கு எதிர்மறையாக பிளவுகளை உருவாக்கவோ, சைபர் செக்யூரிட்டி அச்சுறுத்தலையோ ஏற்படுத்த கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்த மாநாட்டில் மோடி பேசியதில் முக்கியமான விஷயம் தெற்காசிய நாடுகள் பற்றிதான். அதாவது இந்தியா போன்ற வளரும் தெற்காசிய நாடுகளின் தேவைகளையும், சவால்களையும் ஜி7 நாடுகள் கவனத்தில்கொள்ள வேண்டும். எங்களை உள்ளடக்காத எந்த ஒரு பொருளாதார வளர்ச்சியும் முழுமையானது இல்லை என்று கூறியிருக்கிறார்.
தற்போது அமெரிக்கா, ஈரான் மீது நடத்தி வரும் போரால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது இந்தியாதான். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் பணவீக்கம் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க தொடங்கியிருக்கிறது. எனவே போர் போன்ற பொறுப்பற்ற செயல்கள் வேண்டாம் என்று மோடி மறைமுகமாக பேசியிருக்கிறார்.
மோடியின் இந்த பேச்சு வெறுமென இந்தியாவுக்கானதாக மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த தெற்கு ஆசியாவுக்கானதாகவும் இருப்பதாக பல்வேறு தரப்பினர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.