4. முக்கியமாக, வீட்டை விற்கும்போது புரோக்கருக்குத் தரும் கமிஷனை லாபத்தில் இருந்து கட்டாயமாகக் கழிக்க வேண்டும். அதைவிட முக்கியமாக, வீடு விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்திற்கு எவ்வளவு வரி கட்டவேண்டுமோ அதையும் லாபத்திலிருந்து கழிக்க வேண்டும்.
5. வீட்டை வாடகைக்கு விட்டிலிருந்தால், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வீடு விற்பனை மூலம் கிடைக்கும் லாபத்துடன் சேர்த்துக் கணக்கிட வேண்டும்.

இந்தச் செலவுகளையும் வரவுகளையும் கணக்கெடுத்த பிறகு வீடு விற்பனை மூலம் நமக்குக் கிடைத்த லாபத்தைக் கணக்கிட வேண்டும். அப்படிக் கணக்கிடும்போது அதை நிகர (absolute) மதிப்பில் கணக்கிடக் கூடாது. உதாரணமாக, ஒரு வீட்டை ரூ.30 லட்சத்துக்கு வாங்கினீர்கள். 15 ஆண்டுகள் கழித்து அதை ரூ.1 கோடிக்கு விற்கிறீர்கள் எனில், ரூ.70 லட்சம் லாபம் என்று கணக்கிடக் கூடாது.
ஆனால், இன்றைக்குப் பலரும் அப்படித்தான் கணக்கிடுகிறார்கள். அப்படிக் கணக்கிட்டுப் பார்த்து, வீடு விற்பனை மூலம் மிகப் பெரிய லாபத்தை அடைந்துவிட்ட மாதிரி பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள். ஆனால், வீடு விற்பனை மூலம் கிடைத்த லாபம் வரி கட்டியது போக மீதமுள்ள தொகையை ஆண்டுதோறும் கிடைத்த கூட்டு வளர்ச்சி விகித (Compound Annual Growth Rate) அடிப்படையில் கணக்கிட வேண்டும்.
உதாரணமாக, இதுவரை செய்த செலவுகளைச் சேர்த்தபின் வீட்டின் மதிப்பு ரூ.40 லட்சம்; வரி கட்டியது போக, கிடைத்தது ரூ.96 லட்சம். ஆக, லாபம் ரூ.56 லட்சம். இது சதவிகித அடிப்படையில் பார்த்தால், 140% லாபம். ஆனால், 15 ஆண்டுக்கு ஆண்டுதோறும் கிடைத்த கூட்டு வளர்ச்சி விகித அடிப்படையில் கணக்கிட்டால் அது வெறும் 6.01% மட்டுமே! 6.01% லாபம் என்பது வங்கி எஃப்.டி மூலம் கிடைக்கும் லாபத்துக்கு ஒப்பானது. அதாவது, வீடு வாங்கிய பணத்தை வங்கி எஃப்.டி.யில் வைத்திருந்தாலே அந்த லாபம் கிடைத்திருக்கும்.
ஆனால், 15 ஆண்டு காலத்தில் பங்குச் சந்தை சார்ந்த சரியான மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால், 12% லாபம் கிடைத்திருக்கும். அதாவது, ரூ.30 லட்சம் ரூ.1.64 கோடியாகப் பெருகி இருக்கும். ஆக, வீடு விற்பனை மூலம் கிடைத்த லாபத்தை மொத்தமாகக் கணக்கிடுவதற்கும், ஆண்டுதோறும் கூட்டு வட்டி வளர்ச்சி அடிப்படையில் கணக்கிடுவதற்கும் லாப விகிதம் எவ்வளவு வித்தியாசப்படுகிறது பாருங்கள்!