இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “தற்போதைய பட்ஜெட் உரையைப் பார்க்கும்போது, அதை தற்போதைய நிதி அமைச்சரே முழுமையாக எழுதியிருக்க முடியாது என்பது எனது கணிப்பு. அதிகாரிகள் தயாரித்துக் கொடுத்த நீண்ட ஆவணத்தை அமைச்சர் அவையில் வாசிப்பதால்தான், நீண்ட நேர உரையின்போது வாசிப்பதில் தடுமாற்றங்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன.
நான் பட்ஜெட்டைத் தயாரித்தபோது, அந்த ஆவணத்தை நானேதான் எழுதினேன் என்று உறுதியாகச் சொல்ல முடியும். முதலில் ஆங்கிலத்தில் எழுதுவேன். பின்னர் அதை தமிழில் மொழிபெயர்க்கச் செய்து, ஒன்றுக்கு இரண்டு முறை பயிற்சி எடுத்துக்கொண்டு அவையில் வாசிப்பேன். அப்படி தயாராக இருந்தாலும், இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தொடர்ந்து ஒரு நீண்ட ஆவணத்தை வாசிப்பது மிகவும் கடினமான விஷயம்.

பட்ஜெட் உரையை வாசிக்கும் நடைமுறையில் சில மரபுகள் தேவையானதாக இருந்தாலும், அவற்றில் சிலவற்றை காலத்துக்கு ஏற்ப மாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. குறிப்பாக, சட்டமன்றத்தில் நீண்ட நேரம் எழுத்து வடிவிலான உரையை வாசிப்பதற்குப் பதிலாக, மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இயல்பான உரையாடல் பாணியில் முக்கியமான அறிவிப்புகளை எடுத்துரைக்கலாம்.
நான் பொதுவாக எந்தத் தாள்களையும் வைத்துக்கொண்டு பேசுவதில்லை. 99 சதவிகித நேரம் நேரடியாகத்தான் பேசுவேன். புள்ளிவிவரங்களைக்கூட நினைவில் வைத்துக்கொண்டு பேசும் பழக்கம் எனக்கு இருக்கிறது. இரண்டு மணி நேரம் பேச வேண்டிய சூழல் என்றால், முக்கியமான எண்களை மட்டும் ஒரு குறிப்புச் சீட்டில் வைத்துக்கொண்டு பேசலாம். அப்படி பேசும்போது உரை இயல்பாகவும், கேட்பதற்கு சுவாரஸ்யமாகவும் இருக்கும்.