சந்தையின் மனித உணர்வுகள்:
வாரச் சந்தைகள் வெறும் பொருள்கள் வாங்கும் இடம் மட்டுமல்ல. அது மக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் இடமாகவும் இருக்கிறது. பல நாள்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்கள் அங்கே பேசிக் கொள்வார்கள். குழந்தைகள் சிறிய பொருள்களை வாங்கி மகிழ்வார்கள். வயதானவர்கள் சந்தையின் பரபரப்பை ரசித்து நிற்பார்கள். அந்த ஒரு நாள், கிராமத்தின் இயல்பான வாழ்க்கையை மிகவும் அழகாக காட்டுகிறது.
இன்றைய காலத்தில் பெரிய கடைகள் மற்றும் ஆன்லைன் விற்பனைகள் அதிகரித்தாலும், கிராம வாரச் சந்தைகளின் முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை. காரணம், அந்தச் சந்தைகளில் பொருள்களோடு மனிதர்களின் உணர்வுகளும் கலந்திருக்கின்றன.
அதிகாலை முதலே வியாபாரிகள் தங்களது பொருள்களை எடுத்துக்கொண்டு சந்தைக்கு வரத் தொடங்கிவிடுகின்றனர். ஆனால் மாலை நேரம் வந்தால்தான் சந்தை முழுவதும் மக்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படும். அந்தக் கூட்டம் இரவு வரை தொடர்கிறது.
குறைந்த லாபத்தில் நகரும் வாழ்க்கை:
சிலர் காய்கறிகள் விற்கிறார்கள், சிலர் பழங்கள், மலர்கள், திண்பண்டங்கள், சமையல் பொருள்கள் என தங்களால் முடிந்த பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். சிறிய இடத்தில் கடையை அமைத்து, நாள் முழுவதும் விற்பனை செய்யும் அந்த மனிதர்களின் முகத்தில் சோர்வு தெரிந்தாலும், “இன்னைக்கு நல்லா வியாபாரம் ஆகணும்” என்ற நம்பிக்கை மட்டும் அவர்களின் கண்களில் குறையாமல் இருந்தது.
சந்தையின் சத்தம், மக்கள் கூட்டம், விற்பனையாளர்களின் கூச்சல் இவை அனைத்திற்கும் நடுவில், பல குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையும் அமைதியாக நகர்ந்து கொண்டிருந்தது.
அங்கே வியாபாரம் செய்பவர்கள் வெறும் பொருள்களை மட்டும் விற்கவில்லை… தங்களின் உழைப்பையும், நம்பிக்கையையும், வாழ்க்கைப் போராட்டத்தையும்கூட வெளிப்படுத்துகின்றனர்.
எளிமையான வாழ்க்கைக்குள் மறைந்து இருக்கும் மனிதர்களின் உழைப்பையும் பொறுமையையும் இந்தச் சந்தைகள் நினைவூட்டிக் கொண்டே இருக்கின்றன.
– தர்ஷினி.சி