இந்த திடீர் ராஜினாமா குறித்து முதல்வர் டி.கே.சிவகுமார் கருத்து தெரிவிக்கையில், “ராமலிங்க ரெட்டி ஒரு மூத்த தலைவர் மற்றும் எனது நெருங்கிய நண்பர். அவருடன் பேசி இந்த பிரச்னையை நாங்கள் தீர்ப்போம்,” என்று நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும், ராமலிங்க ரெட்டியின் நிலைப்பாடு மிகவும் உறுதியாக உள்ளது. “இனி அவர்கள் நான் விரும்பிய பெங்களூரு வளர்ச்சித் துறையை கொடுத்தால் கூட நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து பணியாற்றுவேன், காங்கிரஸுடன் இருப்பேன்,” என்று அவர் அறிவித்திருப்பது, சமரசத்திற்கான கதவுகளை மூடுவது போல் தெரிகிறது.
வியாழக்கிழமை இரவு முதல்வர் டி.கே.சிவகுமார் தனது 13 அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கீடு செய்தார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில், 2023-ல் அமைச்சரவை மாற்றம் ஏற்படும்போது பெங்களூரு வளர்ச்சித் துறை தனக்கு ஒதுக்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை ரெட்டி முதல்வருக்கு நினைவூட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலாகா ஒதுக்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், அந்த கூட்டத்தில் இருந்து அவர் பாதியிலேயே வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தியுள்ளது. இதுகுறித்து பாஜகவினர், “காங்கிரஸுக்குள் பிளவுகள் உள்ளன. இந்த அரசில் இன்னும் அதிருப்திகள் வெளிவரும். முதல்வரை மாற்றுவதால் மட்டும் காங்கிரஸுக்கு எந்தப் பயனும் ஏற்படாது,” என்று விமர்சித்துள்ளார். இருப்பினும், காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சினையை பெரிதுபடுத்த விரும்பவில்லை. அமைச்சர் பிரியங்க் கார்கே, “ராமலிங்க ரெட்டி கட்சிக்கும், மாநிலத்திற்கும் ஒரு முக்கியமான தலைவர்,” என்று கூறி நிலைமையை சமாளிக்க முயன்றார்.
73 வயதான ராமலிங்க ரெட்டி, பெங்களூரு பி.டி.எம் லேஅவுட் தொகுதியிலிருந்து எட்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவர் இதற்கு முன்பு கர்நாடக அரசில் போக்குவரத்து, அறநிலையத் துறை மற்றும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். பெங்களூரு அரசியலில் கட்சியின் முக்கிய முகமாக விளங்கும் ஒரு மூத்த தலைவர் பதவியை ராஜினாமா செய்திருப்பது, புதிய அரசின் ஸ்திரத்தன்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.