மார்க் சக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் (வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் ஆகியவற்றின் தாய் நிறுவனம்) சமீபத்தில் தனது முக்கிய செயலிகளுக்கு உலகளவில் சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
வணிகங்கள், கிரியேட்டர்கள் மற்றும் மெட்டா AI பயனர்களுக்காகவும் புதிய சந்தாக்கள் சோதிக்கப்பட்டு வருகின்றன. ஸ்டாண்டர்டு இன்ஸ்டாகிராம் ப்ளஸ் மற்றும் ஃபேஸ்புக் ப்ளஸ் சந்தாக்களுக்கு மாதம் ₹99 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வாட்ஸ்அப் ப்ளஸ் சந்தாவுக்கும் மாதம் ₹99 தான். ஆனால், தற்போது இந்தியாவில் அறிமுக சலுகையாக முதல் ஆறு மாதங்களுக்கு 50% தள்ளுபடியில் கிடைக்கிறது.
சரி, இத்தனை நாள் இலவசமாக சேவைகளை வழங்கிவந்த மெட்டா, திடீரென ஏன் கட்டண சந்தாக்களை நோக்கி நகர்கிறது? இதன் பின்னணியில் இருப்பது, மெட்டாவின் மிகப்பெரிய AI கனவுதான் என்கிறார்கள் தொழில்நுட்ப ஆய்வாளர்கள்.
செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் பின்தங்கியிருப்பதாகக் கருதப்படும் மெட்டா, மற்ற நிறுவனங்களுடன் போட்டிபோட, பெரும் தொகையை இதில் முதலீடு செய்துவருகிறது. இந்த விண்ணை முட்டும் AI செலவுகளைச் சமாளிக்கவே, இந்த புதிய வருமான வழியை மெட்டா அவசரமாகத் தேடுகிறது. சமீபத்தில், ஸ்கேல் AI நிறுவனர் அலெக்சாண்டர் வாங்கை, தனது சூப்பர் இன்டலிஜென்ஸ் ஆய்வகத்திற்குத் தலைமை தாங்க, சுமார் 14.3 பில்லியன் டாலர் கொடுத்து மெட்டா வாங்கியது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. 2026-ம் ஆண்டுக்கான மூலதனச் செலவினத்தை 125 பில்லியன் முதல் 145 பில்லியன் டாலர் வரை மெட்டா உயர்த்தியுள்ளது. இது பெரும்பாலும் AI கம்ப்யூட் உள்கட்டமைப்பு, டேட்டா சென்டர்கள் மற்றும் இதர கூறுகளுக்காகச் செலவிடப்பட உள்ளது.