இன்னொரு ஜெயலலிதா எடப்பாடி? அதிகாரம் எப்போதும் ‘அவர்’ கையில்.. அதிமுக சீனியர்களுக்கு அதிருப்தி ஏன்? | EPS Faces Fresh AIADMK Dissent Over Power-Centric Leadership Style

Spread the love

Tamilnadu

oi-Rajkumar R

சென்னை: அதிமுகவில் எஸ்பி வேலுமணி உள்ளிட்டோருக்கு கட்சிப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு அதிகாரம் இல்லாத பதவிகள் வழங்கப்பட்டுள்ளதால் அவர்களிடம் அதிருப்தி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், அனைத்து முக்கிய அதிகாரங்களையும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருப்பது, “ஜெயலலிதா பாணியில் கட்சியை நடத்த முயற்சிக்கிறார் என்ற பேச்சை அதிமுக வட்டாரங்களில் கிளப்பியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல், கட்சியின் மூத்த தலைவர்களுக்கிடையே பெரும் பிளவை ஏற்படுத்தியது. குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர், தவெக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தனர்.

இதனால் அவர்கள் வகித்து வந்த மாவட்ட செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகள் அனைத்தும் பறிக்கப்பட்டன. அந்த இடங்களில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதன் மூலம் கட்சி அமைப்பின் மீது தனது கட்டுப்பாட்டை இபிஎஸ் மேலும் வலுப்படுத்தினர் என்கின்றனர்.

Edappadi Palaniswami AIADMK SP Velumani

அதிமுக

காலப்போக்கில் சில பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு பின்னர் அரசியல் சூழ்நிலை மாறியது. தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த அதிமுக அதிருப்தி அணியினருக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. இதையடுத்து, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, கட்சியில் இணைந்து செயல்பட முடிவு செய்தனர். அவர்களை மீண்டும் ஏற்றுக்கொண்டாலும், முன்பு வகித்த அதிகாரமிக்க பதவிகளை உடனடியாக வழங்காமல், சில வாரங்கள் காத்திருந்தார் பழனிசாமி.

எஸ்.பி. வேலுமணி

இந்நிலையில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு சமீபத்தில் வெளியிடப்பட்ட நிர்வாகிகள் பட்டியலில், எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதேபோல், தங்கமணி, கருப்பணன், கே.பி. அன்பழகன், காமராஜ், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த நியமனங்கள் சீனியர் நிர்வாகிகளை முழுமையாக திருப்திப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.

மாவட்டச் செயலாளர்

அதிமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிதான் மிக முக்கியமான அதிகாரம் கொண்டதாக கருதப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகளை நியமிப்பது, கட்சிப் போராட்டங்களை ஒருங்கிணைப்பது, தேர்தல் நேரத்தில் வேட்பாளர் பரிந்துரை செய்வது உள்ளிட்ட பல முக்கிய அதிகாரங்கள் மாவ்ட்ட செயலாளர்களிடம் தான் உள்ளன. ஆனால் அமைப்புச் செயலாளர் பதவி பெரும்பாலும் ‘டம்மி’ பதவியாகவே பார்க்கப்படுகிறது. அதிமுகவில் ஏற்கனவே 60-க்கும் மேற்பட்ட அமைப்புச் செயலாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

துணைப் பொதுச்செயலாளர்

பொதுக்குழு மற்றும் தலைமைக் கழகக் கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிர, அந்தப் பதவிக்கு தனிப்பட்ட நிர்வாக அதிகாரங்கள் இல்லை என்பதால், பழைய மாவட்டச் செயலாளர்கள் பலரும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. துணைப் பொதுச்செயலாளர் பதவி பெயரளவில் உயர்ந்த பதவியாக இருந்தாலும், கட்சியின் அன்றாட நிர்வாகம், நிர்வாகிகள் நியமனம், நீக்கம், முக்கிய அரசியல் முடிவுகள் போன்ற அனைத்து அதிகாரங்களும் பொதுச்செயலாளர் வசமே இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.

ஜெயலலிதா

இதனால், புதிய பதவிகள் வழங்கப்பட்டாலும், அதிகாரம் இல்லாத பொறுப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக சில மூத்த தலைவர்கள் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுக வட்டாரங்களில் தற்போது அதிகமாக பேசப்படும் விஷயம், எடப்பாடி பழனிசாமியின் தலைமை பாணிதான். ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவில் முக்கிய முடிவுகள் அனைத்தும் அவரது கையில்தான் இருந்தன. மாவட்டச் செயலாளர் நியமனம் முதல் வேட்பாளர் தேர்வு வரை அனைத்து முடிவுகளையும் அவர் நேரடியாக எடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி

அதேபோல தற்போது, கட்சியின் அனைத்து முக்கிய அதிகாரங்களையும் தன்னிடம் மட்டுமே வைத்துக்கொண்டு, மற்ற நிர்வாகிகளுக்கு பெயரளவிலான பொறுப்புகளை மட்டும் வழங்கும் நடைமுறையை எடப்பாடி பழனிசாமி பின்பற்றுகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். “கட்சியில் இறுதி முடிவு பொதுச்செயலாளருடையது மட்டுமே” என்ற நிலைப்பாட்டில் அவர் உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்கள்

இந்நிலையில், மா.செ. பதவி கிடைக்காத முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அதிருப்தி அடைந்த நிர்வாகிகள் விரைவில் ஒன்றுகூடி ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், தற்போது நியமிக்கப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர்கள் எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்றால், அவர்களிடம் இருந்து அந்தப் பொறுப்புகளைப் பறித்து மீண்டும் மூத்த முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *