இபிஎஸ் vs சி.வி.சண்முகம்: சட்டசபையில் வெளிச்சத்திற்கு வந்த அதிமுக பூசல்; யாருக்கு எத்தனை MLA ஆதரவு?

Spread the love

2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் சவாலாக அமைந்துவிடவில்லை. இந்த முடிவால் அதிமுகவும் சத்தமில்லாமல் மிகப்பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அதிமுக தொடங்கிய காலம் முதல் பெரும்பாலும் ஆளும் கட்சியாகவும், எதிர்க்கட்சியாகவும் இருந்த அதிமுகவிற்கு, இந்த முறை கிடைத்துள்ள இடமோ, ‘மூன்றாவது இடம்’.

இதனால் அதிமுக முகாமில் கடும் அதிருப்தி. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, அதிமுக வெற்றிக்கனியைச் சுவைக்கவே இல்லை.

இது அதிமுகவின் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பக்கம் கடும் அதிருப்தியாகத் திரும்பியுள்ளது.

இதனால், எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் என இரண்டு அணிகள் அதிமுகவில் பிரிந்துள்ளன.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

வெட்ட வெளிச்சம்

சி.வி.சண்முகம் தரப்பு தவெகவிற்கு ஆதரவு என்கிற பேச்சும் கடந்த ஒரு வாரத்தில் எழுந்தது என்பதை மறந்துவிட முடியாது.

சி.வி.சண்முகம் வீட்டில் பேச்சுவார்த்தை, எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை போன்றவற்றை இந்த ஒரு வாரத்தில் மறைந்து மறைந்து நடந்து வந்த அனைத்தும், இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா நடந்தது. அதற்கு சி.வி.சண்முகம் & டீம் எடப்பாடி பழனிசாமிக்கு முன்பே சட்டமன்றத்திற்கு வந்து, உள்ளேயும் சென்றுவிட்டனர். இவர்களுக்குப் பின்தான், பழனிசாமி லேட் அட்டென்டன்ஸ் ஆக வந்தார்.

பதவியேற்பு விழாவிற்குப் பிறகு, சி.வி.சண்முகம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு தனித்தனியாக தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் ‘சட்டமன்றக் குழுத் தலைவர்’ பதவிக்கு கடிதம் அளித்துள்ளனர்.

சி.வி.சண்முகம் தரப்பு முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை சட்டமன்றக் குழுத் தலைவராக முன்மொழிந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்பின் சட்டமன்றக் குழுத் தலைவர் சாய்ஸ் சொல்லவே வேண்டியதில்லை.

சி.வி.சண்முகம் - எஸ்.பி.வேலுமணி
சி.வி.சண்முகம் – எஸ்.பி.வேலுமணி

எம்.எல்.ஏக்கள் ஆதரவு

இதில் சி.வி.சண்முகம் தரப்பிற்கு 30 அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவும், பழனிசாமி தரப்பிற்கு 17 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு, ‘யார் முதல்வர்’ தொடங்கி ‘இரட்டை இலை சின்னம் பிரச்னை’, ‘இரட்டை தலைமை பிரச்னை’ என்று வீசிய அனைத்து அலைகளும் சில மாதங்களாக ஓய்ந்திருந்தன. இப்போது மீண்டும் அந்த அலை எழ தொடங்கியுள்ளது.

கடந்த ஒரு வாரமாக திரைமறைவில் இருந்த அதிமுக பிரச்னை, இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அடுத்து இரு தரப்பின் நகர்வும் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *