இளைஞர்களுக்கு சவால் … 51 வயதில் மருத்துவம் படிக்க களமிறங்கிய சுரேஷ்குமார்! – Kumudam

Spread the love

கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது சுரேஷ்குமார். இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ள அவர், தனது நீண்ட நாள் மருத்துவக் கனவை தற்போது நனவாக்கியுள்ளார்.

பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை சுரேஷ்குமாருக்கு இருந்தது. ஆனால், அப்போது அவரால் அந்தக் கனவை தொடர முடியவில்லை. இதற்கிடையில், 2022-ஆம் ஆண்டு மீண்டும் மருத்துவப் படிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டு, தமிழ் வழியில் நீட் தேர்வை எழுதினார். இருப்பினும், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.

கடந்த ஆண்டு மருத்துவக் கலந்தாய்வில் தாயும், மகளும் இணைந்து மருத்துவ இடங்களைத் தேர்வு செய்த செய்தி அவருக்கு புதிய உத்வேகத்தை அளித்தது. இதையடுத்து, இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் மீண்டும் பங்கேற்ற சுரேஷ்குமார் 192 மதிப்பெண்கள் பெற்றார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட காயத்தை அடிப்படையாகக் கொண்டு மாற்றுத்திறனாளிகள் பிரிவில் மருத்துவக் கலந்தாய்வில் பங்கேற்றார். நேற்று நடைபெற்ற சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வில், நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பைத் தேர்வு செய்தார்.

இதுகுறித்து சுரேஷ்குமார் கூறுகையில், “ரத்தப் பரிசோதனை மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வந்தேன். தற்போது அந்த வேலையை விட்டுவிட்டு மருத்துவப் படிப்பை தொடர முடிவு செய்துள்ளேன். சொந்த ஊரில் உள்ள கல்லூரியிலேயே படிக்க இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நிச்சயம் மருத்துவப் படிப்பை முழுமையாக முடித்து மருத்துவராக வலம் வருவேன்” என்றார்.

51 வயதில் மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் சுரேஷ்குமார், ‘கனவு காண வயதில்லை; சாதிக்க வயது ஒரு தடையல்ல’ என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக மாறியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *