இஸ்லாமிய நேட்டோ.. பாகிஸ்தான் அணியில் இணைகிறது வங்கதேசம்? இந்தியாவுக்கு பெரும் நெருக்கடி? | Islamic NATO: Bangladesh Explores Joining Saudi-Pakistan-Turkey Defence Pact

Spread the love

International

oi-Shyamsundar I

டாக்கா: இஸ்லாமிய நேட்டோ எனப்படும் பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய ராணுவக் கூட்டணியில் இணைவதற்கான சாத்தியக்கூறுகளை வங்கதேசம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

சர்வதேச அளவில் இஸ்லாமிய நேட்டோ என்று அழைக்கப்படும் இந்த ராணுவ ஒப்பந்தம், தெற்காசிய மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.

Islamic NATO

மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் என்றால் என்ன?

சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் கடந்த ஆகஸ்ட் 7 அன்று The Mecca Joint Defence Agreement என்றழைக்கப்படும் மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. நேட்டோ அமைப்பின் 5-வது பிரிவைப் போன்றே, இந்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், மற்ற நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்படும் என்ற கூட்டுப் பாதுகாப்பு அம்சம் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு உற்பத்தி, ராணுவ தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் கூட்டு ராணுவப் பயிற்சிகள் ஆகியவற்றை விரிவுபடுத்துவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், இந்தக் கூட்டணி ஒரு சில நாடுகளுக்கான பிரத்யேகக் குழுவாக இருக்காமல், இஸ்லாமிய நாடுகள் தங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து இஸ்லாமிய நேட்டோவாக விரிவடைய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

வங்கதேசம் இதில் இணைய விரும்புவது ஏன்?

வங்கதேசம் இந்த அமைப்பில் இணைவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமான இறுதி முடிவை அறிவிக்கவில்லை என்றாலும், அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதை இது காட்டுகிறது.

பொருளாதார உதவி

வங்கதேசத்தின் பொருளாதாரத்திற்கு மிக முக்கியமான வெளிநாட்டு நிதி ஆதாரமாக சவுதி அரேபியா திகழ்கிறது. 2025-26 நிதியாண்டின் முதல் 11 மாதங்களில் மட்டும் சவுதியில் இருந்து சுமார் 5.28 பில்லியன் அமெரிக்க டாலர் அந்நியச் செலாவணி வங்கதேசத்திற்கு வந்துள்ளது. இது அந்நாட்டின் மொத்த வருவாயில் சுமார் 16 சதவீதமாகும். சவுதியுடன் நெருக்கமான உறவைப் பேணவும், அந்நாட்டின் முதலீடுகளை ஈர்க்கவும் இந்த ஒப்பந்தம் உதவக்கூடும்.

பாதுகாப்பு மற்றும் ஆயுத விநியோகம்

வங்கதேசத்திற்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை வழங்குவதில் துருக்கியும் பாகிஸ்தானும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. துருக்கி ட்ரோன்கள், போர்க்கப்பல்கள் மற்றும் கவச வாகனங்களை வழங்கி வருகிறது. பாகிஸ்தான் ஜேஎஃப்-17 தண்டர் போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களை விநியோகிக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலமாக புதிய தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நவீன ஆயுதங்களை எளிதில் பெற முடியும் என வங்கதேசம் கருதுகிறது.

எரிசக்திப் பாதுகாப்பு

வங்கதேசம் தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவைகளுக்கு மத்திய கிழக்கு நாடுகளையே பெரிதும் நம்பியுள்ளது. இதனால் அந்த நாடுகளுடன் நெருக்கமான உறவை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் வங்கதேசம் உள்ளது.

இந்தியாவுடனான உறவு

வரலாற்று ரீதியாக இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருந்த வங்கதேசம், அதே வேளையில் சீனாவுடனும் இணக்கமான சமநிலையைப் பேணி வந்தது. ஆனால், எல்லைப் பிரச்சனைகள் மற்றும் நதிநீர் பகிர்வு தொடர்பான இழுபறிகளால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் சமீபகாலமாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, 2024 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவர் புரட்சியைத் தொடர்ந்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவரது அவாமி லீக் கட்சி வங்கதேசத்தில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தாரிக் ரஹ்மான் தலைமையில் வங்கதேச தேசியவாதக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் வங்கதேசம் ஃபர்ஸ்ட் என்ற கொள்கையை முன்னெடுத்து வருகிறார். இவர் பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருக்கிறார். இதுவும் கூட இந்த இஸ்லாமிய நேட்டோ அணியில் வங்கதேசம் இணைய காரணமாக அமையும் கூறப்படுகிறது.

1971-ல் பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த விடுதலைப் போரின் வரலாற்றுத் தழும்புகள் வங்கதேச மக்களின் மனதில் இன்னும் நீங்காமல் உள்ளதால், பாகிஸ்தான் முன்னெடுக்கும் ஒரு ராணுவ அமைப்பில் இணைவது உள்நாட்டில் மதச்சார்பற்ற அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை உருவாக்கும்.

இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு பெரும் அண்டை நாடுகளுடனான உறவை பாதிக்காமல் கையாள்வது வங்கதேசத்திற்குப் பெரும் சவாலாக அமையும். இந்த மெக்கா ஒப்பந்தத்தின் உறுப்பினர் சேர்க்கை விதிகள் மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகள் இன்னும் முழுமையாகத் தெளிவுபடுத்தப்படவில்லை.

இப்போதைக்கு டாக்கா இதில் இணைவதை தீவிரமாகப் பரிசீலித்து வந்தாலும், தனது நாட்டின் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் பொருளாதார நலன்களையே முதன்மையாகக் கொண்டு இறுதி முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *