ஈரான் அணுசக்தி: இந்தியாவிலிருந்து இஸ்ரேல், வாஷிங்டன் வரை பரவிய வதந்தி! – உண்மை என்ன?

Spread the love

அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான மோதல்கள் இனி வான்வெளியிலோ அல்லது ஹார்முஸ் ஜலசந்தியிலோ மட்டும் நிகழ்வதில்லை. ஏவுகணைத் தாக்குதல்களும், ட்ரோன் கண்காணிப்புகளும் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், சமூக வலைதளங்களில் மீம்கள் மற்றும் தவறான தகவல்களின் மூலம் ஒரு நிழல் யுத்தம் அமைதியாக நடந்து கொண்டிருக்கிறது. மாறி மாறி பரப்பப்படும் வதந்திகளும், மறுப்புகளும் நிகழ்நேரத்தில் போரின் போக்கையும், ஸ்தம்பித்துள்ள போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளையும் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன.

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம், இந்த டிஜிட்டல் போரின் தீவிரத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. ஈரானின் அணு ஆயுதத் திட்டம் குறித்த, சரிபார்க்கப்படாத ஒரு பரபரப்பான தகவல், இணையத்தின் ஒரு மூலையில் இருந்து உருவானது. ஆனால், சில மணி நேரங்களிலேயே அது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் முக்கிய ஊடகங்களின் தலைப்புச் செய்தியானது. இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உரையில் மேற்கோள் காட்டப்பட்டது. மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தில் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதராக இருந்த மைக் வால்ட்ஸ் போன்ற முக்கிய அரசியல் பிரமுகர்களாலும் பகிரப்பட்டது என நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

நெதன்யாகு
நெதன்யாகு

ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை, இந்தியாவில் இருந்து இயங்கும் ஒரு பெயர் குறிப்பிடாத ‘எக்ஸ்’ (X) கணக்கு, ஒரு அதிர்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்தது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படைத் தளபதி, பிரிகேடியர் ஜெனரல் அஹ்மத் வாஹிதி, “இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் அணு ஆயுதங்களைக் கைவிடாத வரை, ஈரான் ஒருபோதும் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடாது” என்று அறிவித்ததாக அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. தளபதியின் படத்துடனும், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட அணு குண்டு வெடிப்புப் படத்துடனும் அந்தப் பதிவு வெளியிடப்பட்டது.

அந்தத் தளபதி அவ்வாறு கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கிவிட்டது என்பதற்கும் எந்த நிரூபணமும் இல்லை. ஆனாலும், அந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவுவதை தடுக்க முடியவில்லை. இந்த மேற்கோள் முதலில் இஸ்ரேலிய சமூக வலைதளக் கணக்குகளால் பகிரப்பட்டு, பின்னர் அங்குள்ள ஒரு தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பப்பட்டது.

ஈரான் அணு குண்டு தயாரிப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முதல் நிகழ்வு இது என்று அந்த சேனல் வர்ணித்தது. அன்றைய மாலைக்குள், ஜெருசலேமில் உள்ள இஸ்ரேலின் ஹெர்சல் மலையில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆற்றிய உரையில் இந்தத் தகவல் இடம்பெற்றது. ஈரானின் உண்மையான நோக்கத்திற்கு இதுவே சான்று என்று அவர் குறிப்பிட்டார்.

வாஷிங்டனில், ட்ரம்ப் நிர்வாகத்தின் முன்னாள் ஐ.நா. தூதர் மைக் வால்ட்ஸ், இந்தத் தகவலை ஆன்லைனில் பகிர்ந்து, “பல ஆண்டுகளாக வெளிப்படையாகத் தெரிந்த ஒன்றை ஈரான் இறுதியாக ஒப்புக்கொள்கிறது” என்று குறிப்பிட்டார். புளோரிடா செனட்டர் ரிக் ஸ்காட்டும் இதை மறுபதிவு செய்தார்.

ஃபாக்ஸ் நியூஸ் (Fox News) தொலைக்காட்சியும் இந்த செய்தியை வெளியிட்டது.

இந்த வதந்தியின் பயணத்தை நியூயார்க் டைம்ஸ் கண்டறிந்தது. சுமார் 1,75,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட ஒரு இந்திய ‘எக்ஸ்’ கணக்கில் இருந்து இது தொடங்கியது. இரண்டு மணி நேரத்திற்குள், 82,000 பின்தொடர்பவர்களைக் கொண்ட மற்றொரு இந்தியக் கணக்கு, இதன் இந்தி மொழிபெயர்ப்பைப் பகிர்ந்தது.

அங்கிருந்து, இஸ்ரேலின் உளவுத்துறையின் பெயரைக் கொண்ட ஆனால் அதனுடன் எந்தத் தொடர்பும் உறுதிப்படுத்தப்படாத ‘மொசாட் கமென்டரி’ என்ற கணக்கு இந்தத் தகவலைப் பரப்பியது. அடுத்த அரை மணி நேரத்தில், இஸ்ரேலின் ‘சேனல் 14’ தொலைக்காட்சி இந்த மேற்கோளை ஆங்கிலத்தில் ஒளிபரப்பியது. பிரதமரின் மகனும் அரசியல் விமர்சகருமான யாயிர் நெதன்யாகு, சில நிமிடங்களில் இந்த பதிவுகளை மேலும் பரப்பினார். இதெல்லாம் நடந்து மூன்று மணி நேரத்திற்குள், இந்த வதந்தி அவரது தந்தையின் உரையில் இடம்பிடித்தது.

ட்ரம்ப் - ஈரான் - நெதன்யாகு
ட்ரம்ப் – ஈரான் – நெதன்யாகு

இந்த வைரல் பதிவை ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி, “இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான பொய்ப் பிரசாரத்தின் ஒரு எடுத்துக்காட்டு” என்று நிராகரித்தார். இத்தகைய வதந்திகளுக்குப் பின்னால் இஸ்ரேல் இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார், ஆனால் அதற்கான ஆதாரங்களை அவர் வழங்கவில்லை. கடந்த இரண்டு தசாப்தங்களாக ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பதை நியாயப்படுத்த இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் கடந்த முப்பது ஆண்டுகளாக சர்வதேச கண்காணிப்பில் உள்ளது, இருப்பினும் டெஹ்ரான் அது முற்றிலும் குடிமக்களின் பயன்பாட்டிற்கானது என்று வலியுறுத்தி வருகிறது. ஈரான் மீதான தனது கடுமையான நிலைப்பாட்டிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறிய காரணங்களில் அந்நாட்டின் அணுசக்தித் திட்டமும் ஒன்றாகும்.

விரைவில், இந்தத் தகவலின் நம்பகத்தன்மை குறித்த கேள்விகள் எழத் தொடங்கின. மைக் வால்ட்ஸின் பதிவு எந்த விளக்கமும் இன்றி ‘எக்ஸ்’ தளத்தில் இருந்து அமைதியாக நீக்கப்பட்டது. இந்த ஒரு சம்பவம், பெயர் தெரியாத கணக்கில் பிறந்த ஒரு பொய்யான மேற்கோள், சில மணி நேரங்களில் மொழி மற்றும் எல்லைகளைக் கடந்து, அது உண்மையா என்று சரிபார்க்கப்படுவதற்கு முன்பே, உயர் மட்ட அரசியல் தலைவர்களின் பேச்சுகளையும், சர்வதேச விவாதங்களையும் எப்படி வடிவமைக்க முடியும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *