
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வந்தன. இதையடுத்து, ஏப். 7 அன்று இருதரப்புக்கும் இடையே 2 வாரங்களுக்குப் போர்நிறுத்தம் கொண்டு வரப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். பாகிஸ்தான் தலைமையில் இஸ்லாமாபாதில் நடைபெற்ற ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான பிரதிநிதிக் குழுக்கள் இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதற்காக, பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி ஆசிம் முனீர் ஈரானுக்குச் சென்றிருந்தார். அங்கு ஈரான் உச்சத்தலைவர்களை பாகிஸ்தான் ராணுவ தளபதி சந்தித்து பேசியிருந்தார். அமெரிக்காவுடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தை வருமாறும் அப்போது அவர் அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி விரைவில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதுக்குச் செல்ல உள்ளதாக தெரிகிறது. இதே போன்று அமெரிக்கா தரப்பில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் குழுவினரும் பாகிஸ்தான் வருவார்கள் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருப்பது குறிப்பிடதக்கது.