International
oi-Prasanna Venkatesh
ஈரான் அரசு, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களுக்கு புதிய அனுமதி வழங்குவதை திடிரென நிறுத்தியுள்ளது. சுவிஸ் நாட்டில் அமெரிக்கா – ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வரும் வேளையில் இத்தகைய முடிவு எடுக்க முக்கியமான காரணமும் உள்ளது.
ஹார்முஸ் வழியாக கப்பல்கள் பயணிக்க புதிய அனுமதிகள் வழங்காவிட்டாலும், ஏற்கனவே அனுமதி பெற்ற கப்பல்கள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இதனால் உலகளவிய கச்சா எண்ணெய் சப்ளையில் புதிய மாற்றங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் புரட்சிகர காவல்படை (IRGC) கடற்படை, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கப்பல்களை மட்டுமே ஹார்முஸ் வழியாக செல்ல அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தினமும் மாறுபடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் ஹார்முஸ் வழியாக உள்ளே மற்றும் வெளியேற செல்லும் கப்பல்கள் எண்ணிக்கை ஒரு நாளுக்கு 50க்கும் அதிகமாக தாண்டியுள்ளது. ஜெனிவா பேச்சுவார்த்தைக்கு முன்பு வெறும் 3-4 என்ற அளவில் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.
திங்கட்கிழமை ஹார்முஸ் வழியாக சுமார் 1 கோடி பேரல் கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது. இதில் 70% க்கும் மேல் IRGC நியமித்த பாதையில் சென்றுள்ளது. இது சந்தையில் எண்ணெய் சப்ளை இயல்பு நிலைக்கு திரும்பும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் புதிய அனுமதிகளை அளிக்காதத்திற்கு 2 காரணங்கள் உள்ளது.
அமெரிக்கா ஈரானுக்கு 60 நாள் சலுகை
முதல் காரணம்: அமெரிக்கா ஈரான் எண்ணெய் விற்பனைக்கும், ஏற்றுமதிக்கும் 60 நாட்கள் தடை விலக்கு கொடுத்துள்ளது. இந்த சலுகை ஆகஸ்ட் 21, 2026 வரை செல்லுபடியாகும். இதன் மூலம் ஈரான் கச்சா எண்ணெய் உற்பத்தி, விற்பனை மற்றும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.
இந்த சலுகை மூலம் அமெரிக்க அரசு முன்பு தடை செய்யப்பட்ட கப்பல்களுடனான பரிவர்த்தனைகளையும், வங்கி மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளையும் அனுமதிக்கிறது. அமெரிக்க நிதி அமைச்சகம் இந்த தற்காலிக உரிமங்களை வழங்கியுள்ளது.
இந்த சலுகை உலகளவிய கச்சா எண்ணெய் விலையை நிலைப்படுத்தவும், எண்ணெய் இருப்புகளை நிர்வகிக்கவும் வழங்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக இந்த சலுகை அமைந்துள்ளது.
நிர்வாக சீர்திருத்தம்
இரண்டாவது காரணம்: ஈரான் புதிய அனுமதிகளை வழக்காமல் இருக்க முக்கிய காரணம், தற்போது ஹார்முஸ்-ஐ விட்டு வெளியேறும் கப்பல்கள் 70 சதவீதம் மட்டுமே IRGC படைகள் செல்லும் வழித்தடத்தில் நகர்கிறது. மீதமுள்ளவை மாற்று வழியாக செல்கிறது. இதை கட்டுப்படுத்தவும், இனி வரும் நாட்களில் அனைத்து கப்பல்களும் IRGC படைகள் வழியில் மட்டுமே பயணிக்கும் வகையில் நிர்வாக சீர்திருத்தம் செய்ய இந்த கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சீர்திருத்தம் ஜெனிவா பேச்சுவார்த்தை முடிந்து டோல் கட்டணம் விதிக்கவும் ஈரானுக்கு உதவும்.
இதோடு அமெரிக்க அளித்துள்ள இந்த 60 நாள் ஏற்றுமதி சலுகை காலத்திற்குள் ஈரான் அதிகளவிலான கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்து வருமானத்தை ஈட்டவும், வேகமாக ஏற்றுமதி செய்யவும் போக்குவரத்து வழித்தடத்தில் நெரிசலை குறைக்கவும் இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொள்ளலாம்.