Sports
oi-Yogeshwaran Moorthi
அட்லாண்டா: கொலம்பிய கால்பந்து வீரர் ஜமிண்டன் காம்பஸ் உயிருக்கு பயந்து சொந்த நாட்டிற்கு சக வீரர்களுடன் விமானம் ஏறாமல் தலைமறைவாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்த போது ஜமிண்டன் காம்பஸ், அந்த வாய்ப்பை வீணடித்தார். இதனால் அவருக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்திருக்கின்றனர்.
ஃபிஃபா உலகக்கோப்பை தொடரில் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சில அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. கொலம்பியா அணியைச் சேர்ந்த ஜமிண்டன் காம்பஸ் என்ற வீரர் உயிருக்கு பயந்து சொந்த நாட்டிற்கு விமானம் ஏறாமல் தலைமறைவாகி இருக்கிறார். இது கால்பந்து வட்டாரத்தில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் கொலம்பியா அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் கொலம்பியா அணிக்கு வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அமைந்தது. மின் ஃபீல்டரான ஜமிண்டன் காம்பஸ் கோல் அடிக்க சரியான வாய்ப்பு கிடைத்தும், அதனை வீணடித்தார்.
கடைசி 5 நிமிடத்தில் கிடைத்த கோல் வாய்ப்பை, கோல் கீப்பருடன் நேருக்கு நேர் மோதி வீணடித்தார். இதனால் கொலம்பிய ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ஒரு கட்டத்தில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் கமெண்ட்டுகளில் காம்பஸை மிரட்ட தொடங்கினர். இதனிடையே அவருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் கொலை மிரட்டல்கள் வந்துள்ளன.
இந்த கொலை மிரட்டலால் ஜமிண்டன் காம்பஸ் கொஞ்சம் ஆடிப் போயிருக்கிறார். ஏனென்றால் 1994ஆம் ஆண்டு அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் கொலம்பிய வீரர் ஆண்ட்ரஸ் எஸ்கோபார் ஓன் கோல் அடித்தார். இதன் பின் கொலம்பியா திரும்பிய சில நாட்களிலேயே எஸ்கோபார் மெடலின் நகரில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இதனால் மீண்டும் அப்படியான சம்பவம் நடந்துவிடக் கூடாது என்று கொலம்பியா அரசும் தீவிரமாக உள்ளது. இதனால் கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஜமிண்டன் காம்பஸ் கொலம்பியாவுக்கு செல்லாமல், அர்ஜென்டினாவுக்கு சென்று ரகசியமாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி உலகக்கோப்பை போன்ற முக்கிய தொடர்களில் சொதப்பினால், உடனடியாக ரசிகர்கள் வீரர்களின் வீடுகளில் கல்லெறிந்த சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் கொலம்பியாவில் ஒரு படி மேலே சென்று கால்பந்து வீரருக்கு கொலை மிரட்டல் விடுத்திருப்பது பல்வேறு தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் விவாதமாக மாறியுள்ளது.