உங்கள் கடன் கட்டுக்குள் தான் இருக்கிறதா? – 'இந்த' கணக்குப் போட்டு பாருங்க |பணம் வளர்ப்போம்

Spread the love

பணம் வளர்ப்போம் – ஒரு டாபிக் ஐந்து நாள்கள் என்பது தான் இந்தத் தொடரின் கான்செப்ட். அதாவது நிதி சம்பந்தமான ஏதேனும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை எடுத்து அதன் A டு Z விஷயங்களைத் தெரிந்துகொள்வது ஆகும்.

அப்படி இந்த வாரம் திங்கட்கிழமையில் இருந்து வெள்ளிக்கிழமை வரை, நாம் பார்க்கப்போகும் டாபிக், ‘கடன்’.

விலைவாசி, லைஃப்ஸ்டைல் மாற்றம் போன்ற காரணங்களால் ‘கடன்’ வாங்குவது இன்றையக் காலக்கட்டத்தில் சர்வ சாதாரணமாகி விட்டது.

 விஷ்ணு வரதன்
விஷ்ணு வரதன்

முக்கியமாக, இப்போது வங்கிகள், நிதி நிறுவனங்களில் இருந்து கடன் வாங்குவதும் எளிதாகிவிட்டது.

இதனால், நிறைய கடன்களை பலர் வாங்கிவிடுகின்றனர். ஆனால், அதை கட்டி முடிப்பதற்குள் அவர்களுக்கு கண்விழி பிதுங்கிவிடுகிறது.

இப்படி வலையில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்கான சூப்பர் வழியைக் கூறுகிறார் நிதி ஆலோசகர் விஷ்ணு வரதன்.

“இன்டர்நெட், சோசியல் மீடியாக்களைப் போல, இன்றைய காலகட்டத்தில் கடனும் பலருடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாகிவிட்டது.

இதை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. காரணம், இன்றைய காலகட்டம் அப்படி.

விலைவாசி ஏறுவதுபோல, மக்களுக்கு வருமானம் ஏறுவதில்லை. அதனால், செலவுகளை சமாளிக்க கடன் தவிர்க்க முடியாதது ஆகிவிடுகிறது.

அதனால், கடன் வாங்குவது தவறில்லை. அளவுக்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டோமா என்பதில் தான் தவறு அடங்கியிருக்கிறது.

அளவுக்கு அதிகமாக கடன் வாங்கிவிட்டோமா என்பதை இ.எம்.ஐ கணக்கை வைத்து கணக்கிட்டுவிடலாம்.

கடன்
கடன்

ஒரு குறிப்பிட்ட தொகை உங்களுக்கு கடன் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அந்தக் கடனுக்கு மாதா மாதம் செல்லும் இ.எம்.ஐ தொகை உங்கள் மொத்த வருமானத்தில் 30 – 40 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது.

ஒரு கடனுக்கு வருமானத்தில் 30 சதவிகித இ.எம்.ஐ, அடுத்த கடனுக்கு 15 சதவிகித இ.எம்.ஐ, மற்றொரு கடனுக்கு 35 சதவிகித இ.எம்.ஐ என்று கணக்கு போடக்கூடாது.

நீங்கள் வாங்கியிருக்கும் மொத்த கடனுக்கு செல்லும் இ.எம்.ஐ மொத்த வருமானத்தில் 30 – 40 சதவிகிதத்தைத் தாண்டக் கூடாது. 30 சதவிகிதத்திற்குக் கீழ் இ.எம்.ஐ இருந்தால், அது சூப்பரோ சூப்பர்.

ஒருவேளை 30 சதவிகிதத்திற்கு மேல் உங்களது இ.எம்.ஐ சென்றால், தின செலவுகளில் நீங்கள் தள்ளாடலாம். சேமிப்பு குறையும். அவசர சூழல்களில் கடன் வாங்கும்போது, உங்கள் தோளில் பெரும் சுமை ஏறிக்கொள்ளும்.

கடன் உங்கள் வாழ்க்கைக்கு உதவுவதாகத் தான் இருக்க வேண்டுமே தவிர, உளைச்சலாக மாறக் கூடாது“.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *