ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதுவதற்கோ, நேர்முகத்தேர்வினை எதிர்கொள்வதற்கோ மொழி ஒரு தடை அல்ல. நம் தாய்மொழியான தமிழ் மொழியில் எழுதலாம், நேர்முகத் தேர்வினை எதிர்கொள்ளலாம். இங்கு மாணவர்களுடன் அதிக எண்ணிக்கையில் பெற்றோர்களும் வந்திருக்கிறீர்கள். மிகவும் மகிழ்ச்சிபடக்கூடியதுதான். கடந்த ஆண்டு ஐ.ஏ,.எஸ் தேர்வில் வெற்றி பெற்ற மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த மெளலீஸ்வரன் என்ற மாணவரின் தாயார், அவரின், மகனின் பாராட்டுவிழாவில் பேசும்போது, “நான் கருவுற்ற மகிழ்ச்சியான செய்தியைக் கேட்டதுமே எனக்கு பிறப்பது மகனோ, மகளோ அந்தக்குழந்தையை பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி ஐ.ஏ.எஸ் ஆக்குவேன் என இறைவனிடம் வேண்டிக் கொண்டேன்.

எனக்கு மகன் பிறந்ததும் மெளலீஸ்வரன் என்ற பெயர் சூட்டியதுடன், அப்பெயருடன் ஐ.ஏ.எஸ் என்பதையும் சேர்த்துதான் கூப்பிடுவேன். நான் நினைத்தபடி என் ஆசை நிறைவேறியது” எனக்கூறி விம்மி அழுதார். மாணவர்களே, நீங்கள் யூ.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற வேண்டும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ் போன்ற உயர் பதவிகளை அடைய வேண்டும் என, உங்கள் பெற்றோர்களும் கனவுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கனவை நனவாக்குங்கள்” என்றார்.