உச்சக்கட்ட கோபத்தில் டிரம்ப் போட்ட உத்தரவு.. அடுத்த நொடி ஈரானில் ஆரம்பித்த குண்டு மழை.. பரபரப்பு | US Launches Ninth Night Of Airstrikes On Iran As Strait Of Hormuz Tensions Escalate in middle east

Spread the love

International

oi-Vigneshkumar

வாஷிங்டன்: ஈரான் – அமெரிக்கா இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே வடக்கு ஈராக்கில் நடந்த ராணுவ நடவடிக்கையின் போது அமெரிக்க வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், மற்றொரு வீரர் காயமடைந்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை அதிகரித்துள்ளது.

அமெரிக்கா ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வருவது போன்ற சூழல் கடந்த மாதம் ஏற்பட்டது. இதனால் உலக நாடுகள் நிம்மதி அடைந்திருந்தன. ஆனால், சில வாரங்களில் நிலைமை மொத்தமாக தலைகீழாக மாறியது. இரு தரப்புமே பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் ஹார்முஸ் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

US Iran

தாக்குதல் தீவிரம்

ஈரானை குறிவைத்து அமெரிக்காவும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில் தான் ஈரானின் தாக்குதலில் மற்றொரு அமெரிக்க வீரர் உயிரிழந்தார். சனிக்கிழமை இரவு தான் இரு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டு இருந்த நிலையில், இப்போது மற்றொரு வீரரும் உயிரிழந்துள்ளார். இதை அமெரிக்காவின் சென்டரல் கமாண்ட் உறுதி செய்துள்ளது.

என்ன நடந்தது!

ஜூலை 18ஆம் தேதி வடக்கு ஈராக்கில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானின் ட்ரோன் வெடிக்காமல் இருந்தது. அந்த டிரோனை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது அமெரிக்க வீரர் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு வீரர் லேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். அதேநேரம் உயிரிழந்த மற்றும் காயமடைந்த வீரர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இதன் மூலம் கடந்த ஐந்து மாதங்களாக நடைபெற்று வரும் இந்த மோதலில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

டிரம்ப்

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து கடும் கோபமடைந்துள்ள டிரம்ப், ஈரான் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் வர்த்தகக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த ஈரானின் ராணுவ முகாம்களை குறிவைத்து அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. சர்வதேச கடல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானை பலவீனப்படுத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஈரானின் பல பகுதிகளில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்கிழக்கு துறைமுக நகரமான சாபஹார் பகுதியில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அருகிலுள்ள கோனாரக் நகரில் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், வடமேற்கு ஈரானில் உள்ள தப்ரிஸ் நகரையும் அமெரிக்கா தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.. அதேநேரம் இதை அமெரிக்கா உறுதி செய்யவில்லை. மேலும், உயிரிழப்பு அல்லது சேதம் குறித்த தகவல்களையும் ஈரான் வெளியிடவில்லை.

அமெரிக்க தூதரகம்

போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகம் முக்கியமான பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்திய பஹ்ரைன் பகுதியில் உள்ள சில இடங்களை ஈரான் குறிவைக்கக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ள அமெரிக்க தூதரகம், அங்குள்ள அமெரிக்க குடிமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும், உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றவும் கேட்டுக் கொண்டுள்ளது.

வளைகுடாவில் நிலைமை இப்படி மோசமாகி வருவதால் கச்சா எண்ணெய் விலை உயர ஆரம்பித்துவிட்டது. இப்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 85 டாலரில் வர்த்தகமாகி வருகிறது. போர் தீவிரமடைய தீவிரமடைய இது மேலும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *