Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: சட்டமன்றத் தீர்மானத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த “மேகதாது அணை விவகாரத்திற்காகப் புதிதாக ஒரு நடுவர் மன்றத்தை அமைக்க வேண்டும்” என்ற திருத்தத்தை விஜய் தலைமையிலான தவெக அரசு ஏற்றிருப்பது தமிழ்நாட்டிற்கு பாதகமாகும் என்று தமிழக விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளது. இந்த திருத்தம் காரணமாக தமிழகத்திற்குச் சாதகமாக உள்ள தற்போதைய சட்டப் பாதுகாப்பை நாமே பலவீனப்படுத்துவது போல் ஆகிவிடும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். இதுபற்றி விவரமாக பார்ப்போம்.
தஞ்சையில் தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தமிழக சட்டமன்றத்தில் நேற்றைய தினம் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகாட்டில் அணைக்கட்ட முயற்சிக்கும் நிலையில் அதற்கு எதிராக தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி காவிரி குறுக்கே மேகேதாட்டில் அணை கட்டுவது தொடர்பாக புதிதாக நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தம் தமிழக அரசு ஏற்று தீர்மானத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திருத்தத்தை ரத்து செய்யவும் குறிப்பாக திருத்தத்தை ரத்து செய்ய வேண்டும் ரத்து செய்து தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை. ஏற்கனவே நடுவர் மன்ற தீர்ப்பின்படி 15 ஆண்டுகளுக்கு காவிரி உத்தரவில் எந்த ஒரு திருத்தத்தையும் செய்யக்கூடாது என்று உள்ள நிலையில் இது புதிய சிக்கலை உருவாக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். இது உண்மையில் சிக்கலானது என்றும் விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இது பற்ற விரிவாக பார்ப்போம்.
15 ஆண்டு தடை உத்தரவு
கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 16 அன்று உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. அந்தத் தீர்ப்பில் மிகத் தெளிவாக, “காவிரி நீர் பங்கீட்டு உத்தரவு அடுத்த 15 ஆண்டுகளுக்கு (அதாவது 2033 வரை) எக்காரணம் கொண்டும் மாற்றப்படக் கூடாது” என்று உத்தரவிட்டுள்ளது. இப்போது நாம் புதிய நடுவர் மன்றம் வேண்டும் என்று கேட்டால், “15 ஆண்டுகள் முடியும் முன்பே தமிழகமே புதிய நடுவர் மன்றத்தைக் கோருகிறது, எனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யலாம்” என்று கர்நாடகா இதைப் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் என்று நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
‘மேகேதாட்டு’ என்பது புதிய தனி விவகாரம் அல்ல
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிலும் “கீழ் மாநிலமான தமிழகத்தின் அனுமதியின்றி காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா புதிய அணைகளைக் கட்டக் கூடாது” என்று ஏற்கனவே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க, மேகதாது அணைக்காகப் புதிய நடுவர் மன்றம் கேட்பது என்பது, ஏற்கனவே நமக்குச் சாதகமாக இருக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் வலிமையைக் குறைத்துவிடும்.”அப்படியென்றால் பழைய தீர்ப்பில் தெளிவில்லை என்று தமிழகமே ஒப்புக்கொள்கிறதா?” என்ற கேள்வியைக் கர்நாடகா எழுப்பும் என்றும் அச்சம் தெரிவிக்கிறார்கள்.
காலதாமத உத்தி – கர்நாடகாவிற்குச் சாதகமாகும்
ஒரு புதிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டால், அது விசாரணையைத் தொடங்கி இறுதித் தீர்ப்பு வழங்கக் குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் வரை ஆகலாம் (ஏற்கனவே இருந்த காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்க 17 ஆண்டுகள் ஆனது). இந்த நீண்ட இடைவெளிக்காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, கர்நாடகா அரசு நீதிமன்றத் தடைகளைத் தாண்டி “மத்திய அரசின் அனுமதி பெற்றுவிட்டோம்” என்றோ அல்லது “வழக்கு நிலுவையில் உள்ளது” என்றோ கூறி மேகதாது அணையை வேகவேகமாகக் கட்டி முடித்துவிடும் ஆபத்து இருக்கிறது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் முடங்கும்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு (CWMA) தான் மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி மறுக்கும் முழு சட்ட அதிகாரமும் தற்போது உள்ளது. நாம் புதிய நடுவர் மன்றம் கோரினால், இந்த ஆணையத்தின் செயல்பாடுகளும், அதன் சட்டப்பூர்வ அதிகாரமும் தற்காலிகமாக முடங்கிப்போகும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அச்சம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கூறுவது போல, ஏற்கனவே கையில் இருக்கும் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகிய வலிமையான ஆயுதங்களை விட்டுவிட்டு, “புதிய நடுவர் மன்றம்” என்ற புதிய சிக்கலுக்குள் நுழைவது தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும். எனவேதான், தீர்மானத்தில் சேர்க்கப்பட்ட அந்தத் திருத்தத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

