ஏனெனில் அவர்கள் ஒரு நடிகரை மட்டுமல்ல, ஒரு காலத்தின் மனநிலையையும், அந்தக் காலத்து மனிதர்களின் கனவுகளையும், உணர்வுகளையும் அறிந்துகொள்ள வேண்டும். எனக்கு ஒருநாள் குழந்தைகள் பிறந்தாலோ, அல்லது அடுத்த தலைமுறையினரிடம் ஒரு செய்தியை விட்டுச் செல்லும் வாய்ப்பு கிடைத்தாலோ, நான் அவர்களிடம் சொல்ல விரும்பும் முக்கியமான விஷயம் இதுதான்.
திரைப்படங்களை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காதீர்கள். அவற்றை ஒரு காலத்தின் கண்ணாடியாகவும், மனித உணர்வுகளின் ஆவணமாகவும், சமூகத்தின் நினைவுச் சுவடாகவும் பாருங்கள். இயக்குநர் பாலுமகேந்திரா சார் அடிக்கடி கூறிய ஒரு கருத்து எனக்கு மிகவும் பிடிக்கும். “நல்ல படங்களையும் பார்க்க வேண்டும்; கெட்ட படங்களையும் பார்க்க வேண்டும். அப்போதுதான் சினிமாவைப் புரிந்துகொள்ள முடியும்” என்பார். அந்த வார்த்தைகளுக்குள் ஒரு ஆழமான ஞானம் ஒளிந்திருக்கிறது.
ஒரு படைப்பின் உயரத்தை உணர்வதற்கும், அதன் குறைகளை அறிந்துகொள்வதற்கும், பரந்த பார்வை அவசியம். அந்த வகையில், நான் வளர்ந்த தலைமுறையின் உணர்வுகளோடு கலந்து வாழ்ந்த பல திரைப்படங்கள் விஜயின் ஆரம்பகால படைப்புகளில் இருக்கின்றன. அவை வெறும் வணிகத் திரைப்படங்கள் அல்ல,ஒரு காலத்தின் காதல், நட்பு, குடும்ப பாசம், நம்பிக்கை, தியாகம், மனிதநேயம் ஆகியவற்றை சுமந்து நிற்கும் நினைவுக் களஞ்சியங்கள்.
இன்றைய தலைமுறையினருக்கு அந்த திரைப்படங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருக்கிறது. ஒரு தலைமுறை ரசித்த கலைப்படைப்புகளை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது என்பது வெறும் நினைவுகளைப் பகிர்வது அல்ல, அது ஒரு பண்பாட்டு மரபை பாதுகாப்பதாகும்.
அதனால் தான், நாளைய தலைமுறையினர் உலக சினிமாக்களையும் பார்க்கட்டும், புதிய படைப்புகளையும் ரசிக்கட்டும். அதே நேரத்தில், அவர்கள் ஒரு முறை திரும்பிப் பார்த்து, தங்கள் முன்னோர்கள் ரசித்த அந்த பழைய திரைப்படங்களின் உலகிற்குள்ளும் பயணிக்க வேண்டும். ஏனெனில் சில திரைப்படங்கள் காலத்தை கடந்தும் உயிருடன் இருக்கும். சில கதாபாத்திரங்கள் தலைமுறைகளை கடந்தும் மனிதர்களின் நினைவுகளில் வாழும்..