சைலன்ட் இன்ஃப்ளூயன்சர் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு முதல்வர் விஜய் குறித்தும், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி குறித்தும் பேசியிருக்கிறார்.
“விஜய், இன்று நம் திரையுலகிலிருந்து கலைக் குடும்பத்திலிருந்து தமிழக முதல்வராகி உள்ளார். அவருக்கு வாழ்த்துகள்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் வரிசையில், நம் திரைக் குடும்பத்திலிருந்து ஒருவர் முதல்வராகி இருக்கிறார். இது சினிமாக்காரர்கள் எல்லோருக்கும் பெருமையான விஷயம்.

சினிமாவில் எந்தப் பிரச்னையாக இருந்தாலும், எம்ஜிஆரும் கருணாநிதியும் அவற்றைக் கேட்டு தீர்த்து வைப்பார்கள். அதன்பிறகு, சினிமாவைச் சிலர் கைவிட்டு விட்டனர்.
அதனால்தான், விருதுகள் தாமதமாகக் கிடைக்கிறது. எம்ஜிஆர் மற்றும் கருணாநிதி மாதிரி விஜய்யும் சினிமாவை உங்கள் குடும்பம்போல நினைத்து, எங்கள் பிரச்னையை உடனேயே கேட்டறிந்து அவற்றைத் தீர்த்து வைக்க வேண்டும்.
உங்களை சினிமாவும் கைவிடாது, மக்களும் கைவிட மாட்டார்கள். உதயநிதி சனாதனத்தை சட்டசபையில் ஒழிப்பேன் என்று சொல்வது வன்மத்தின் உச்சம், ஆணவத்தின் உச்சம்.
சனாதனம் என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தது. ஆனால் விஜய் நாங்கள் உண்மையான மதசார்பற்ற அரசு என்று சொல்கிறார். அவரை நாங்கள் ஆதரிப்போம்.

சட்டசபையில் ஒரு மதத்தைக் குறிப்பிட்டு பேசுவதோ அழிப்பேன் என்று சொல்வதோ தவறு. அதை எப்படி அனுமதிக்கிறீர்கள்? அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும்” என்று பேசியிருக்கிறார்.