Tamilnadu
oi-Shyamsundar I
சென்னை: தஞ்சாவூரில் காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், நேற்று காலை சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.
தஞ்சாவூர் காவல்துறையினர் அவர் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை அழைத்துச் சென்ற நிலையில், மாலையிலேயே அவரை நீதிமன்றக் காவலில் அடைக்காமல், காவல் நிலைய ஜாமீனிலேயே விடுவிப்பதாக உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பு ஒப்புக்கொண்டது.

ஆரம்பத்தில் உதயநிதியை சிறையில் அடைக்கத் திட்டமிட்ட ஆளுங்கட்சியான தவெக அரசு, திடீரெனத் தனது முடிவை மாற்றிக்கொண்டு பின்வாங்கியதன் பின்னணியில் 3 மிக முக்கியமான அரசியல் மற்றும் சட்டக் காரணங்கள் இருப்பதாக விவரமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அலைமோதிய அனுதாபம் – கணக்கு தப்பிய தவெக
உதயநிதி ஸ்டாலினைக் கைது செய்த செய்தி பரவிய அடுத்த நிமிடமே, தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் கொதித்தெழுந்து வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கினர். பிரதான எதிர்க்கட்சித் தலைவரை ஒரு பேச்சிற்காகக் கைது செய்தது, பொதுமக்கள் மற்றும் நடுநிலையாளர்கள் மத்தியில் உதயநிதிக்கு திடீர் அரசியல் அனுதாபத்தை உருவாக்கியது. முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது அரசு எதிர்பார்க்காத வகையில் இந்த எதிர்ப்பு அலை உருவெடுத்தது. ஒரு சிறிய பேச்சை இவ்வளவு பெரிய அரசியல் விவகாரமாக மாற்றி, உதயநிதியை பழிவாங்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது என்ற பிம்பம் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியதால், அரசு உடனடியாகப் பின்வாங்கும் சூழல் ஏற்பட்டது.
மாஸ் தலைவராக உருவெடுக்கும் அபாயம்
அரசியலில் ஒரு தலைவரை முடக்க நினைத்து எடுக்கப்படும் கைது நடவடிக்கைகள், பல நேரங்களில் அந்தத் தலைவரை மாபெரும் மாஸ் தலைவராக உருவெடுக்க வைத்துவிடும். உதயநிதியைச் சிறையில் அடைத்தால், அவர் சிறையிலிருந்தபடியே திமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து, மிகப்பெரிய அரசியல் எழுச்சியை உருவாக்குவார் என்றும், அது அவரது பிம்பத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும் தவெக தலைமை உணர்ந்தது. அவரை ரிமாண்ட் செய்து சிறையில் வைப்பது, அவரை மேலும் பலசாலி ஆக்குமே தவிர பலவீனப்படுத்தாது என்ற அரசியல் கணக்கீட்டின் அடிப்படையிலேயே அவரை உடனடியாக விடுவிக்க அரசு சம்மதித்தது.
நீதிமன்றத்தின் கொட்டுக்கு அஞ்சிய அரசு தரப்பு
உதயநிதி பேசிய கருத்துக்கும், அவர் மீது காவல்துறை சுமத்திய வழக்கின் கடுமையான சட்டப் பிரிவுகளுக்கும் இடையே எந்தவித நேரடித் தொடர்பும் இல்லை என்பதே நிதர்சனம். அரசியல் நோக்கத்திற்காகக் கொடூரமான பிரிவுகளைப் பயன்படுத்தி ரிமாண்ட் செய்ய முயல்வதை, சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி தரப்பு வழக்கறிஞர்கள் மிக வலுவாகச் சுட்டிக்காட்டினர்.
உதயநிதி மீது மொத்தம் ஒன்பது பிரிவுகளில் வழக்கு
BNS
196- பொது அமைதியை கெடுத்தல்
192- கலவரத்தை தூண்டும் வகையில் ஆத்திரம்
79- பெண்களின் சுயமரியாதைக்கு களங்கம் ஏற்படுத்துதல்
352- வேண்டுமென்றே ஒருவரே அவமதித்தல்
296(b) ஆபாசமாக பேசுதல்
351(2)- மிரட்டல்
BNS 61- குற்றவியல் சதி
பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் பிரிவு (4)
தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 67
அவசர வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறையின் இந்த அத்துமீறலைக் கடுமையாகக் கண்டித்து, கடுமையான உத்தரவைப் பிறப்பிப்பார் என்ற சட்டப் ரீதியான அச்சம் அரசுக்கு ஏற்பட்டது. நீதிமன்றத்திடம் இருந்து பலத்த கொட்டு வாங்குவதற்கு முன்பாக, உஷாரான அரசு தரப்பு வழக்கறிஞர்கள், “எங்களுக்கு அவரைச் சிறையில் அடைக்கும் எண்ணமில்லை, விசாரணைக்குப் பின் காவல் நிலைய ஜாமீனிலேயே விடுவித்துவிடுகிறோம்” என அவசர அவசரமாக நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துத் தப்பித்துக் கொண்டனர்.
ஆரம்பத்தில் உதயநிதியைச் சிறையில் அடைத்து அரசியல் ரீதியாக முடக்க நினைத்த தவெக அரசு, இறுதியில் இந்த 3 காரணங்களால் தனது திட்டத்தைக் கைவிட்டுத் பின்வாங்கியுள்ளது. இதன் மூலம், கைதான சில மணி நேரங்களிலேயே கம்பீரமாக வெளியே வந்த உதயநிதி ஸ்டாலின், இந்த அரசியல் மோதலில் வெற்றியைப் பெற்றுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Why Vijay’s Government Backtracked on Udhayanidhi’s Remand? 3 Reasons