
சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் முதலில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய ஆட்சியில் சட்டம் இருந்தாலும் ஒழுங்கு இல்லை என்றும், பெண்களின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
மேலும், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை தவெக அரசு ஏன் ரத்து செய்தது என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக பிரமுகர், அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் உதயநிதி குறிப்பிட்டார். அதேபோல், பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட போதிலும், தவெக நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதற்கு டென்ஷனான அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் குறுக்கிட்டு பதிலளித்தார். தவெகவைச் சேர்ந்த பெண் நிர்வாகி அளித்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தவறு செய்தவர் யாராக இருந்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
மேலும், பெண் நிர்வாகியிடம் அத்துமீறியதாக கூறப்படும் நபர் தவெகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தப் புகார் தொடர்பாக தவெக எம்.எல்.ஏ. சரவணனுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
தவெக ஆட்சியில் யார் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் புஸ்ஸி ஆனந்த் சட்டசபையில் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் உரையாற்றிக் கொண்டிருந்தபோது அமைச்சர் குறுக்கிட்டு பதிலளித்ததற்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது.