`உன் அப்பாவை கொன்றேன், நீதான் அடுத்த குறி’- கொலை செய்யப்பட்ட மகா., அமைச்சர் மகனுக்கு கொலை மிரட்டல்

Spread the love

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாபா சித்திக் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்டார். பாபா சித்திக் நடிகர் சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற ஒரே காரணத்திற்காக அவரை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் சுட்டக் கொலை செய்தனர். தற்போது பாபா சித்திக்கின் மகனும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) எம்எல்ஏ-வுமான ஜீஷான் சித்திக்கிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. வெளிநாட்டில் இருந்து செயல்படும் கேங்ஸ்டர் ஜீஷன் அக்தர் சமூக ஊடகங்களில் குரல் மூலம் மிரட்டலை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

பாபா சித்திக் கொலையில் அக்தர் முக்கிய சதிகாரர்களில் ஒருவர் ஆவார். மேலும் இக்கொலை வழக்கில் மும்பை குற்றப்பிரிவு மற்றும் பிற விசாரணை அமைப்புகளால் அக்தர் தேடப்பட்டு வருகிறார். அக்தர் அனுப்பி இருக்கும் குரல் மிரட்டல் சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. அந்த குரல் குறிப்பில், பாபா சித்திக் கொலைக்கு பொறுப்பேற்று ஜீஷான் சித்திக்கை மிரட்டி, “உன் தந்தையை கொன்றேன், அடுத்த குறி நீதான்.

எனது எல்லா நடவடிக்கைகளிலும் நீங்கள் தலையிடுகிறீர்கள். உங்களால் முடிந்தவரை க்ரைம் பிராஞ்சிற்கு ஓடுங்கள். உங்கள் பாதுகாப்பை அதிகப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கொலை மிரட்டல் குறித்து ஜீஷான் சித்திக் அல்லது அவரது குடும்பத்தினர் யாரும் முறைப்படி போலீஸில் புகார் அளிக்கவில்லை. ஜீஷன் சித்திக் தற்போது இந்தியாவுக்கு வெளியே இருக்கிறார். மும்பை குற்றப்பிரிவு வைரலான ஆடியோ கிளிப்பின் நம்பகத்தன்மையை கண்டறியவும், அது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதையும் கண்டறிய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஜீஷான் சித்திக் இந்தியா திரும்பியதும் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என போலீஸார் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாபா சித்திக் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வெளியில் மர்ம நபர்கள் இரண்டு பேரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக நடிகர் சல்மான் கான் வீட்டின் மீதும் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *