மேலும், அரசும், நிறுவனங்களும் இணைந்து சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020, இ ஷ்ரம் பதிவு திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் மருத்துவ உதவி, உயிர் காப்பீடு, விபத்து காப்பீடு, மாற்றுத்திறன் நிவாரணங்கள் வழங்க உறுதி செய்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில் டெலிவரி பணியாளர் ஒருவர் இரவு 8 மணியளவில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ஆனால், நிறுவன தலைமை அதிகாரி அதனைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. இறந்தவரின் உடலையும் இரவு 2 மணிக்குத்தான் மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
பின் நிறுவனம் சரியாகப் பதிலளிக்கவில்லை எனக் கோபமடைந்த சக பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் நிறுவனம் சிறு தொகையை இழப்பீடாக வழங்கியுள்ளது. பணியாளர்களும் பணம் திரட்டி தங்களால் முடிந்தவரை இறந்தவரின் குடும்பத்திற்கு உதவியுள்ளனர்.
சென்னையில் உணவு டெலிவரி பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர், ஒருமுறை வாடிக்கையாளர் பகிர்ந்திருந்த லொக்கேஷன் தெளிவாக இல்லாததால் குறிப்பிட்ட இடத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோதும், அழைப்புகள் ஏற்கப்படாமல் துண்டிக்கப்பட்டிருக்கிறது. பின்னர் சில நேரத்திற்குப் பிறகு வாடிக்கையாளர் தொடர்புகொண்டு, டெலிவரி தாமதமானதாகக் கூறி கோபமாகப் பேசியதாக அந்த ஊழியர் தெரிவித்தார்.

அதேபோல், கடுமையான போக்குவரத்து நெரிசலால் தாமதம் ஏற்பட்ட சூழல்களிலும் சில வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்ளாமல் இழிவாகப் பேசிய அனுபவங்களும் ஏற்பட்டுள்ளதாகக் கூறினர்.
மேலும், சில வாடிக்கையாளர்கள் முதலில் ஒரு லொக்கேஷனைப் பகிர்ந்துவிட்டு, டெலிவரி பணியாளர்கள் அந்த இடத்திற்குச் சென்ற பிறகு வேறு இடத்தைத் தெரிவிப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் தேவையற்ற அலைச்சல், கூடுதல் நேர விரையம் மற்றும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளும் நிலையும் ஏற்படுகிறதாகப் பணியாளர்கள் கூறுகின்றனர்.
நம் வாழ்க்கையை எளிமையாக்க விடாது ஓடிக்கொண்டிருக்கும் இந்த டெலிவரி பணியாளர்களின் உழைப்பையும், வலியையும் உணர வேண்டியது அவசியமானது.
– தர்ஷினி.சி