International
oi-Halley Karthik
ஒட்டாவா: குளிர் பிரததேசங்களான மேற்கு நாடுகளில், தற்போது வெயில் வாட்டி வருகிறது. குறிப்பாக கனடாவில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை நெருங்குகிறது. அதே நேரம், அந்நாட்டின் மேற்கு பகுதியில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த இரண்டு வித்தியாசமான காலநிலையால் சூழலியல் ஆய்வாளர்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.
காலநிலை என்பது பொதுவாக ஒரு பிரதேசம் முழுவதும் கொஞ்சம் வித்தியாசத்துடன் ஓரளவு சீரானதாக இருக்காதுதான். கன்னியாகுமரியில் வெயில் அடிக்கிறது எனில், காஷ்மீரில் குளிர் இருக்கும். ஆனால், பனி பெய்யும் அளவுக்கு குளிர் இருக்காது. கனடாவில் இதற்கு நேர்மாறாக நடந்திருக்கிறது. ஒரு பகுதியில் கடும் வெயிலும், இன்னொரு பகுதியில் கனமழையும் பெய்திருப்பது, கண் முன்னே நடக்கும் காலநிலை மாற்றம்தான் என்று சூழலியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

என்ன நடக்குது கனடாவில்?
மேனிடோபா (Manitoba) மற்றும் சஸ்காட்செவன் (Saskatchewan) என கனடாவின் மேற்கு மாகாணங்களில் பெய்து வரும் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மேனிடோபாவின் மேற்குப் பகுதிகளில் கடந்த 7 நாட்களில் மட்டும் சுமார் 25.4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வானிலை மையத்தை பொறுத்தவரை, 10 செ.மீ அளவுக்கு மழை பெய்கிறது எனில், அது கனமழை என்று வரையறுக்கப்படும். 20 செ.மீ வரை பெய்தால் மிக கனமழை. அதுவே, 20 செ.மீ-ஐ தாண்டினால் அதீத கனமழை எனப்படும். கனடாவில் 25.4 செ.மீ அளவுக்கு மழை பெய்திருப்பதால், பல நெடுஞ்சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன, விவசாய நிலங்கள் மற்றும் கால்நடைகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. பிராண்டன் மற்றும் நீபாவா போன்ற நகரங்களில் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கனடாவில் கடும் வெப்பம்
அதேவேளையில், ஒன்டாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இங்கு வெப்பநிலை 30 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வரும் நிலையில், காற்றில் உள்ள ஈரப்பதம் காரணமாக இது 40 டிகிரிக்கும் அதிகமாக உணரப்படுகிறது. டொராண்டோ மற்றும் மாண்ட்ரியல் போன்ற நகரங்களில் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தினறும் மக்கள்
ஜூலை 1-ம் தேதி.. அதாவது இன்று கனடா மக்கள் தேசிய தங்கள் நாட்டின் தேசிய தினத்தை கொண்டாட தயாராக இருந்தனர். இது தவிர உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup) நடைபெறவுள்ள நிலையில், இந்த வானிலை மாற்றங்கள் பெரும் சவாலாக அமைந்துள்ளன. வெப்ப பாதிப்பிலிருந்து தப்பிக்க மக்கள் அதிகளவு தண்ணீர் அருந்துமாறும், தேவையற்ற மது அருந்துவதைத் தவிர்க்குமாறும், முடிந்தவரை நிழலில் இருக்குமாறும் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
புதிய அச்சம்
ஒரு பக்கம் கடும் வெயில்.. இன்னொரு பக்கம் ஆளை மூழ்கடிக்கும் வெள்ளம் என.. இதையெல்லாம் பார்க்கும்போது உலகம் அழிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறதோ? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.
கனடா மட்டும் கிடையாது, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட குளிர் பிரதேச நாடுகளும் கடுமையான வெயிலை எதிர்கொண்டிருக்கின்றன. இது மக்களிடையே புதிய அச்சத்தை கிளப்பி இருக்கிறது.