உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தை சேர்ந்த சுசில் பிரஜாபதி என்பவர் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சட்டக் கல்லூரி மாணவி ஒருவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். வழக்கறிஞர் ஒருவரை அறிமுகம் செய்வதாக அவர் அந்த மாணவியை அழைத்துச் சென்றார். ஹிந்து யுவ வாஹினி அமைப்பைச் சேர்ந்த சுனில் பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் கடந்த 9 மாதங்களாக சிறையில் இருந்த நிலையில், இன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் காஜியாபாத் சிறையில் இருந்து வெளியில் வந்தார். அவருக்கு அவரின் ஆதரவாளர்கள் ஹீரோ வரவேற்பு கொடுத்தனர். சுசிலுக்கு மாலை அணிவித்தனர். அதோடு அவரைத் தங்களது தோளில் தூக்கி சுமந்து சென்று அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி இருக்கிறது. வெற்றி ஊர்வலத்தில் அழைத்துச் செல்வது போன்று அழைத்துச் சென்றனர். சுசில் கழுத்து நிறைய மாலைகளால் நிரம்பி இருந்தார். அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அவருடன் வந்தவர்கள் இதனை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். இது குறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு யாரெல்லாம் வரவேற்பு கொடுத்தனர் என்பது குறித்து விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.