படம் வெளியாகி சரியாக 35 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், மார்த்தாண்டன் எங்கே இருக்கிறார் என விசாரித்ததில், தெற்கே திசையன்விளை அருகேயுள்ள தன் பூர்வீக கிராமத்தில் தனி ஆளாக பொங்கிச் சாப்பிட்டபடி வசித்து வருகிறார் என தகவல் கிடைத்து.
நீண்டதொரு முயற்சிக்குப் பிறகு அவரைத் தொலைபேசியில் பிடித்தோம்.
‘நான் பொறந்து வளர்ந்ததெல்லாம் தெற்கு எரந்தை கிராமம்தான். சின்ன வயசுல படிபபுல சராசரிதான். அதனால நாகர்கோவில்ல ஓவியம் வரையற ஒரு ஸ்கூல்ல சேர்ந்து வரையக் கத்துகிட்டேன். கொஞ்சம் வளர்ந்ததும் எப்படின்னு தெரியலை சினிமா ஆசை வந்திடுச்சு. எங்க மூதாதையர் வழியில ஒருத்தரும் நடிச்சதில்ல.
சினிமா ஆசையில சென்னைக்குக் கிளம்பிட்டேன். அங்க என்னை மாதிரியே சினிமா வாய்ப்பு தேடிட்டிருந்த மறைந்த போண்டா மணி, கிங்காங் உள்ளிட்ட சிலருடைய தொடர்பு கிடைச்சது.
நாங்க வர்ற வாய்ப்புகளை ஒருத்தருக்கொருத்தர் தெரிவிச்சுக்கிடுறது வழக்கம். அப்படிதான் எனக்கும் சினிமா சான்ஸ் கிடைச்சது.
‘கழுகுமலைக் கள்ளன்’ நான் நடிச்ச முதல் படம். தொடர்ந்து இயக்குநர் பாலச்சந்தரின் `ஒரு வீடு இரு வாசல்’ ‘பாளையத்தம்மன்’ முதலான சில படங்களில் நடிச்சேன். 50 படங்களுக்கு மேல நடிச்சிருப்பேன்னு நினைக்கேன்.
நிறையப் படங்களின் பெயர்களே எனக்கு மறந்து போயிடுச்சு. வயசு எழுபதை நெருங்குதில்லையா’ எனக் கேட்டவரிடம் ‘சின்னத்தம்பி’ படத்தில் நடித்தது குறித்துக் கேட்டோம்.