International
oi-Vigneshkumar
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த சில வாரங்களாகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. அத்தியாவசிய பொருட்களை அந்நாட்டு அரசு முடக்கியுள்ள நிலையில், இந்தியா தங்களுக்கு உதவ வேண்டும் என்று ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்களை நடத்தி வரும் கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைவர் சர்தார் அமன் கான் வெளிப்படையாகவே கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீரின் சில பகுதிகளைப் பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்திருப்பது அனைவருக்கும் தெரியும். இந்த போராட்டத்தை ஒடுக்கப் பாகிஸ்தான் பல மோசமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குச் செல்லும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி, முடக்கியுள்ளது.

ஆக்கிரமிப்பு காஷ்மீர்
இதற்கிடையே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டங்களை முன்னின்று நடத்திய கூட்டு அவாமி நடவடிக்கைக் குழு தலைவர் சர்தார் அமன் கான் சில கோரிக்கைகளை விடுத்துள்ளார். இந்தியா மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும், கட்டுப்பாட்டுக் கோட்டு எல்லையைத் திறக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வீடியோவில், “எங்களுக்கு இந்தியாவின் உதவி தேவை. அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்துகள் கூட கிடைக்கவில்லை. இந்தியா எங்களுக்கு உதவ வேண்டும்” என்று அமன் கான் கூறியதாகத் தெரிகிறது.
போராட்டம்
எனினும், இந்த வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த முடியவில்லை. இது கடந்த ஜூன் 30ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என தெரிகிறது. ராவலகோட்டில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் போராட்டக்காரர்களிடையே பேசிய அமன் கான், “நாம் கட்டுப்பாட்டுக் கோட்டு எல்லையை நோக்கி செல்லலாமா?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அங்குக் கூடியிருந்த மக்கள், “செல்வோம்… செல்வோம்…” என்று முழக்கமிட்டனர். மேலும், “எங்களது கோரிக்கைகளைக் கேட்காமல் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தினால், எங்களுக்கும் வேறு வழிகள் உள்ளன” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
எல்லாவற்றையும் விட.. பூஞ்ச் மற்றும் டோடா பகுதிகளில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டு எல்லையைத் திறந்து, நிலைமை மேலும் மோசமடைந்தால் பொதுமக்கள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் அமன் கான் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் அரசு அத்தியாவசிய பொருட்களை முற்றுகையிட்டுத் தடுத்துள்ளதால்.. அப்பகுதியில் உணவு மற்றும் மருந்துகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
பின்னணி
கடந்த மாதம் முதலே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்.. பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் நடைபெற்ற பேரணியில், “ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தானின் ஒரு பகுதி அல்ல” மற்றும் “எங்களுக்குச் சுதந்திரம் வேண்டும்” போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆரம்பத்தில் உள்ளூர் மக்களின் உரிமைகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை வலியுறுத்தித் தொடங்கிய இந்தப் போராட்டம், தற்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை கோரும் இயக்கமாக மாறியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தீவிரவாத அமைப்பு?
ஜூன் 5ஆம் தேதி, JAAC அமைப்பை “பயங்கரவாத அமைப்பு” என அறிவித்து, பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. அதன் பின்னர் பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கைகளால் போராட்டம் மேலும் தீவிரமடைந்ததாகக் கூறப்படுகிறது. போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய அடக்குமுறையில் பலர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.