அ.தி.மு.க இரண்டாகப் பிளவுப்பட்டுள்ள நிலையில், அந்தக் கட்சியின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வுமான கே.சி.வீரமணி, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்து வந்தார். இதனால், கே.சி.வீரமணியிடம் இருந்த திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்து அந்தப் பதவியில் டாக்டர் பசுபதியை நியமித்தார். 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டவர்தான் இந்த பசுபதி. இதையடுத்து, வீரமணி தரப்பு பிரச்னை செய்யக்கூடும் எனத் தகவல் பரவியதால் அ.தி.மு.க மாவட்ட அலுவலகத்துக்கும், பசுபதி வீட்டுக்கும் காவல்துறையினர் பாதுகாப்பு வழங்கினர்.
இந்த நிலையில், இன்றைய தினம் மாவட்ட நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசிய கே.சி.வீரமணி தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

“எவ்வளவு செலவு பண்ணியிருக்கிறோம். ஆனாலும், கட்சியில இருந்து பத்து பைசா கூட கைநீட்டி வாங்கினது இல்ல. என்னோட மனசாட்சி, நாலுபேருக்கு உதவி பண்ணனும். அவ்வளவுதான். `அ.தி.மு.க சார்பாக ஆதரவு கொடுக்கிறோம்’னு சொன்னோம். அவங்க நமக்கு அமைச்சர் பதவி கொடுக்கிறாங்க. கொடுக்காமலிருக்கிறாங்க. அது அவங்க விருப்பம்.
நீங்க எந்த நேரம் வேணாலும் என்னை வந்து சந்திக்கலாம். எம்.எல்.ஏ பதவி இருக்கு. அந்த பதவியை பயன்படுத்தி உங்களுக்குத் துணையாக இருப்பேன். இந்த இயக்கத்துக்கு துணையாக இருப்பேன். நமக்குப் பொதுச்செயலாளர் எடப்பாடியார் தான். கருத்து வேறுபாடு இருந்தாலும், அவர் பின்னாடிதான் நிற்கிறோம். சில பிரச்னைகளால `நெருப்புல குதி’னு சொன்னால் ஏத்துக்க முடியாது. இதையெல்லாம், நீங்க புரிஞ்சிக்கிட்டீங்கனு நெனைக்கிறேன். எது நியாயம்? எது தப்பு?னு பின்னாடி வரிசையில உட்காந்துகிட்டு மனசுல பதிய வச்சி, `எப்படி பண்ணா சரியா இருக்கும்?னு முடிவு பண்ணியிருக்கிறேன். புதிய மாவட்டச் செயலாளருக்கு எல்லோரும் ஒத்துழைப்பு கொடுங்க. எடப்பாடியார் தான் எங்கள் தலைவர். மாற்றுக் கருத்து இல்லை’’ என்று உருக்கமாக பேசினார் கே.சி.வீரமணி.