தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியானதிலிருந்து அதிமுக பிரிவாக செயல்பட்டு வருகிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி தலைமையில் சில எம்எல்ஏக்கள் செயல்பட்டு வரும் நிலையில் முன்னாள் அமைச்சர்கள் சிவி சண்முகம் எஸ் பி வேலுமணி விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் இன்னொரு அணி செயல்பட்டு வருகிறது.
இன்று சட்டப்பேரவையில் விஜய் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க உள்ள நிலையில் அதிமுகவில் சி.வி சண்முகம் தலைமையிலான பிரிவு விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அதே நேரம் எடப்பாடி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய்க்கு எதிராக வாக்களிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இக நிலையில் அதிமுக எம். பி இன்பதுரை,
“அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ கொறடாவின் உத்தரவை மீறி செயல்படும் எந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும், அரசியல் அமைப்புச் சட்டத்தின் 10வது அட்டவணையின் கீழ் கட்சித் தாவல் தடை சட்டம் நிச்சயமாக பொருந்தும்.
சட்டமன்றத்தில் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது கட்சியின் அதிகாரப்பூர்வ கொறடா வழங்கும் உத்தரவை மீறி வாக்களித்தாலோ, வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தாலோ, அல்லது நடுநிலை வகித்தாலோ, அது கட்சித் தாவலாகவே கருதப்படும்.
சிலர் தனி அணியாக செயல்படுவதாலோ அல்லது பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக கூறுவதாலோ, அவர்கள் தனியாக கொறடாவை நியமிக்க முடியாது. அது சட்டப்படி செல்லாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு மிகத் தெளிவாக வழங்கிய தீர்ப்பின்படி:
“ஒரு அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வ தலைமைதான் சட்டமன்ற கொறடாவை நியமிக்க முடியும்; சட்டமன்ற உறுப்பினர்கள் தாமாக ஒன்று கூடி கொறடாவை நியமிக்க முடியாது.”