Tamilnadu
oi-Velmurugan P
சென்னை: ‘சின்ன கவுண்டர்’, ‘எஜமான்’, ‘யஜமான்’ போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த ஆர்.வி.உதயகுமார். இவர் அதிமுகவில் நிர்வாகியாக இருந்தார். அவர் அதிமுகவில் இருந்து விலகி உள்ளார். முன்னதாக அதிமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்த அன்றே ஆர்வி உதயகுமாரும் விலகி உள்ளார்.
‘சின்ன கவுண்டர்’, ‘எஜமான்’, ‘யஜமான்’ போன்ற பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் முத்திரை பதித்த ஆர்.வி.உதயகுமார், கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக அதிமுகவின் விசுவாசமான நிர்வாகியாக திகழ்ந்தவர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் அன்பை பெற்ற இவர், கட்சியின் கொள்கைகளைப் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்த்த முதன்மை நட்சத்திரப் பேச்சாளர்களில் ஒருவர் ஆவார். தற்போதைய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில், கட்சியின் மாநில கலைப்பிரிவு செயலாளர் என்ற உயரிய பொறுப்பில் அவர் இருந்து வந்தார்.

இந்நிலையில், அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தான் ஒட்டுமொத்தமாக விலகுவதாக இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில், “அதிமுகவின் தற்போதைய உட்கட்சி அரசியல் நகர்வுகளும், செயல்பாடுகளும் எனக்குள் ஆழ்ந்த மனவருத்தத்தையும், சொல்லொணா வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் தற்போதைய தலைமை, தங்களைப் போன்ற பல தசாப்தங்களாகக் ரத்தம் சிந்தி உழைத்த மூத்த மற்றும் விசுவாசமான நிர்வாகிகளைச் சரியாக மதிப்பதே இல்லை என்றும், சமீபகால முடிவுகள் அனைத்தும் தொண்டர்களை ஏமாற்றமடையச் செய்துள்ளதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளன. கட்சியின் கலை மற்றும் சினிமாப் பிரிவை ஒற்றை ஆளாகத் தாங்கிப் பிடித்த ஒரு மூத்த பிரமுகர் இப்படி பாதியிலேயே வெளியேறியிருப்பது, எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அரசியல் ரீதியாகப் பலத்த பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக, அதிமுகவில் இருந்து கழன்றுகொள்ளும் முக்கியப் புள்ளிகள் அனைவரும், தமிழ்நாட்டின் தற்போதைய ட்ரெண்டிங் அரசியல் சக்தியான நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (தவெக) நோக்கியே படையெடுத்து வருகின்றனர். ஏற்கனவே 4 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் விஜயபாஸ்கர் போன்றோர் தவெக-வின் பக்கமாகத் நகர்ந்துள்ள சூழலில், ஆர்.வி.உதயகுமாரின் அடுத்த கட்டப் பாய்ச்சலும் தவெக-வை நோக்கியே இருக்குமா அல்லது அவர் முழுமையாகச் சினிமா உலகிற்கே திரும்புவாரா என்ற மி கேள்வி அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் தற்பொழுது விவாதப் பொருளாக மாறியுள்ளது. சி.விஜயபாஸ்கரைத் தொடர்ந்து ஆர்.வி.உதயகுமாரும் வெளியேறியிருப்பது, அதிமுகவின் கோட்டையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

