ஒரு பெண்ணின் உலகம் எதுவரை? வீட்டின் நான்கு சுவர்களுக்குள் அடங்கிவிடும் பொறுப்புகள்தானா அல்லது கண்டங்கள் கடந்து விரியும் எல்லையற்ற வானமா? இந்தக் கேள்விக்குத் தன் ஒற்றை நாள் பயணத்தின் மூலம் பதில் சொல்லியிருக்கிறார் ரேஷ்மா.
சமூக வலைதளங்களில் பலராலும் அறியப்பட்ட டிஜிட்டல் கிரியேட்டர் அனிஷ் பகத்துடன் வீட்டுப் பணியாளராகப் பணிபுரியும் ரேஷ்மா, முதன்முறையாக இந்தியாவை விட்டு வெளியேறி, தாய்லாந்து மண்ணில் தன் அடையாளத்தைத் தேடிய கதை, இன்று இணையத்தையே நெகிழ வைத்திருக்கிறது.

தன் வாழ்நாளில் முதல்முறையாக விமானத்தில் ஏறி, தாய்லாந்துக்கு அனிஷுடன் பயணம் மேற்கொண்டார் ரேஷ்மா. ஆனால், அங்கு சென்றடைந்ததும் அனிஷ் அவரிடம் வைத்த கோரிக்கைதான் இந்தக் கதையின் தொடக்கப்புள்ளி.
“ஒரு நாள் முழுவதும் நீ தனியாக உனக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும்,” என்று அனிஷ் கூறியபோது ரேஷ்மா ஒரு கணம் உறைந்து போனார். “நான் ஒரு சாதாரண வீட்டுப் பணியாளர். இங்கு எனக்கு யாரையும் தெரியாது, அவர்களின் மொழி புரியாது, படிக்கவும் தெரியாது. நான் எப்படித் தனியாகச் சமாளிப்பேன்?” என்று தன் அச்சத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால், அந்த அச்சத்திற்குள்ளேயே ஒரு தீர்வையும் கண்டிருந்தார். “எனக்கு சமைக்கத் தெரியும். அதனால், நண்பர்களைப் பிடிப்பதற்காக பூரணப்போளி செய்திருக்கிறேன்,” என்ற அவரது வார்த்தைகளில், ஒரு பெண்ணின் தன்னம்பிக்கை ஒளிர்ந்தது.