கொடூரம்.! கரப்பான் பூச்சி கட்சி தலைவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்.. வெளியான பகீர் வீடியோ | Cockroach Janata Party Founder Attacked: Abhijit Dipke slapped During NEET Protest in Jaipur

Spread the love

India

oi-Vigneshkumar

ஜெய்ப்பூர்: நீட் உள்ளிட்ட நாடு முழுக்க கல்வி முறைகளில் உள்ள குளறுபடிகளைக் கண்டித்துக் கரப்பான் பூச்சி கட்சி சார்பில் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதற்கிடையே ஜெய்ப்பூரில் இன்று நடந்த போராட்டத்தின் போது அந்த இயக்கத்தின் நிறுவனர் அபிஜீத் திப்கே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.

நாடு முழுக்கவே கடந்த சில நாட்களாகக் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பரபரப்பைக் கிளப்பி வருகிறது. முதலில் ஆன்லைன் இயக்கமாக மட்டுமே இருந்த இந்த கட்சி இப்போது வீதிகளில் இறங்கியும் போராட்டங்களை நடத்தி வருகிறது. ஏற்கனவே இந்த அமைப்பின் போராட்டம் டெல்லி, பெங்களூரில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இன்றைய தினம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

Cockroach Janata Party Founder

தாக்குதல்

அதன்படி ஜெய்ப்பூரில் இன்று நடந்த போராட்டத்தின்போது தான் ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது. அதாவது கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் திப்கே மர்ம நபர்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

இன்று திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில் ஜெய்ப்பூரில் உள்ள ‘ஷஹீத் ஸ்மாரக்’ பகுதியில் ஒரு அமைதியான போராட்டத்திற்கு அபிஜீத் திப்கே அழைப்பு விடுத்திருந்தார். அங்குத் திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுவதற்காக அவர் சென்றார். அபிஜீத் திப்கேவை அவரது ஆதரவாளர்கள் தோளில் சுமந்து மேடையை நோக்கி அழைத்துச் சென்றனர்.

என்ன நடந்தது

அப்போது கூட்டத்தில் புகுந்த சில மர்ம நபர்கள், திடீரென அபிஜீத்தின் கழுத்தில் இருந்த ஸ்கார்ஃபை (பிடித்து இழுத்தனர். மேலும், அவரை சரமாரியாகத் தாக்கியதோடு, பலமுறை கன்னத்தில் அறைந்து கீழே தள்ளவும் முயற்சி செய்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

‘காக்ரோச் ஜனதா கட்சி’ என்பது ஒரு நையாண்டி அமைப்பாகத் தொடங்கப்பட்டது. கடந்த மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதி சூர்யா காந்த் தெரிவித்த சில கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த அமைப்பு உருவானது. “கரப்பான் பூச்சி” என்ற சொல்லை ஒரு போராட்ட அடையாளமாகவும், சாமானிய மக்களின் எதிர்ப்பின் குறியீடாகவும் மாற்றி, இந்த அமைப்பு சமூக வலைத்தளங்களில் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளது. தற்போது இது இந்தியாவின் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் குரலாக உருவெடுத்துள்ளது.

போராட்டம்

அபிஜீத் திப்கே மற்றும் அவரது அமைப்பினர் தற்போது கல்வி முறைகேடுகள் தொடர்பாக முன்வைத்துப் போராடி வருகின்றனர்.. நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முடிவுகளில் உள்ள குளறுபடிகளைத் தடுக்க வேண்டும்.. மேலும், இந்த முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். கல்வி அமைச்சர் பதவி விலகாவிட்டால், மீண்டும் டெல்லியில் மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்று அபிஜீத் எச்சரித்துள்ளார்.

இந்த இயக்கத்திற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது. லடாக்கைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இந்தப் போராட்டங்களுக்கு முன்னின்று ஆதரவு அளித்து வருகிறார். அதேபோல், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

விசாரணை

ஜெய்ப்பூரில் அபிஜீத் திப்கே தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இருப்பினும், இத்தகைய தாக்குதல்கள் தங்களது போராட்டத்தை முடக்க முடியாது என்றும், இளைஞர்களின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்றும் சி.ஜே.பி அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *