Tamilnadu
oi-Nantha Kumar R
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் நேற்று காமராஜர் பிறந்தநாள் விழா நடந்தது. இந்த விழாவில் தொழிலபதிபரும், நடிகருமான லெஜண்ட் சரவணன் பங்கேற்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பிறகு நடந்த விழாவில் மேடையில் லெஜண்ட் சரவணனுக்கு சொகுசு நாற்காலி போடப்பட்டதோடு, மற்றவர்களுக்கு சாதாரண சேர் வழங்கப்பட்டு இருந்தது. இந்த வித்தியாசத்தை கவனித்து லெஜண்ட் சரவணன் செய்த செயல் அனைவரையும் நெகிழ வைத்தது.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இந்த விழாவையொட்டி தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் காமராஜரின் சிலை மற்றும் உருவப்படத்துக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். தென்மாவட்டங்களில் பல இடங்களில் காமராஜர் பிறந்தநாள் விழா விளையாட்டு போட்டிகள், பாட்டு கச்சேரிகள், அன்னதானத்துடன் கொண்டாடப்பட்டது.
காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திலும் பல இடங்களிலும் அவரது பிறந்தநாள் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் நாடார் மகாஜன சங்கம் சார்பில் நடந்த காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் தொழிலதிபரான நடிகரும், தயாரிப்பாளருமான லெஜண்ட் சரவணன் பங்கேற்றார்.
இந்த விழாவில் லெஜண்ட் சரவணன் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பிறகு காமராஜர் பிறந்தநாளையொட்டி பல்வேறு பள்ளிகளில் நடந்த பேச்சுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மொத்தம் 9 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.30 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது.
முன்னதாக இந்த விழாவிற்காக லெ ஜண்ட் சரவணன் மேடைக்கு வந்திருந்தார். அப்போது மேடையில் அவருக்கு மட்டும் சொகுசு நாற்காலி போடப்பட்டு இருந்தது. மற்ற நிர்வாகிகளுக்கு சாதாரண சேர் தயாராக இருந்தது. இந்த வித்தியாசத்தை கவனித்த லெஜண்ட் சரவணன் தனது சொகுசு நாற்காலியை அகற்றி தனக்கும் சாதாரண சேரை தரும்படி கூறினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சொகுசு நாற்காலியை மேடையில் இருந்து அகற்றி மற்றவர்களை போல் சாதாரண சேரை வழங்கினர். அதில் அமர்ந்து விழாவில் பங்கேற்றார் லெஜண்ட் சரவணன்.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் லெஜண்ட் சரவணனை பாராட்டி வருகின்றனர். தொழிலதிபர், நடிகராக இருந்தாலும் கூட அனைவரையும் சமமாக பார்க்கிறார் என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.