உலகளவில் பொருளாதார அறிஞர்கள் பலரும் நிதி நிர்வாகம் தொடர்பாக தொடக்க நிலையில் இருப்பவர்கள் அறிந்துகொள்வதற்குப் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களில் ஒன்று ‘ரிச் டேட் புவர் டேட்’ (Rich Dad Poor Dad).
1997-ஆம் ஆண்டு வெளியான இந்தப் புத்தகம் உலகளவில் 4.4 கோடிக்கும் அதிகமான படிகள் விற்பனையாகி சாதனை படைத்திருக்கிறது. ஆனால் இந்த நூலின் ஆசிரியர் ராபர்ட் கியோசாகி, தாம் சுமார் 1.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.10,000 கோடி) கடனில் இருப்பதாகத் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், “எனக்கு சுமார் 1.2 பில்லியன் டாலர் கடன் இருக்கிறது. ரியல் எஸ்டேட் சொத்துக்களின் மதிப்பு உயரும்போது, அவற்றின் மீது கடன் பெற்று, அந்தப் பணத்தை வரி இல்லாத வருமானமாகப் பயன்படுத்துகிறேன்.
மேலும், ஒரு முதலீட்டில் இழப்பு ஏற்பட்டால் அது மற்றொன்றைப் பாதிக்காத வகையில், ஒவ்வொரு முதலீட்டையும் தனித்தனி நிறுவனங்களாகப் (LLC) பிரித்து நிர்வகிக்கிறேன்.
நான் 1974-ம் ஆண்டிலிருந்தே இதைப் பற்றி ஆராய்ந்து வருகிறேன். அதேவேளையில், முறையான நிதி அறிவும் பயிற்சியும் இல்லாமல் யாரும் இந்த ஆபத்தான கடன் உத்தியைப் பின்பற்றக் கூடாது. கடனைப் பயன்படுத்த நினைப்பவர்கள் முதலில் அதற்கான கல்வியைப் பெற வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே, கியோசாகியின் முன்னாள் மனைவியும் தொழில் கூட்டாளியுமான கிம் கியோசாகி, “பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காகவே ராபர்ட் இவ்வளவு பெரிய தொகையைக் குறிப்பிட்டிருக்கிறார். உண்மையில் சுமார் 1,500 குடியிருப்புகள் சார்ந்த இந்த முதலீட்டு நிலுவைகள் நிறுவனப் பங்காளர்களுடன் சேர்ந்து நிர்வகிக்கப்படுவதால், இது அவருடைய தனிப்பட்ட கடனாகாது.
கியோசாகியின் ஆண்டு வருமானம் 3 மில்லியன் டாலர் என்ற கணக்கீட்டின்படி, அவருடைய உண்மையான கடன் பங்கு 30 முதல் 60 மில்லியன் டாலருக்குள் மட்டுமே இருக்கக்கூடும்” எனத் தெரிவித்திருக்கிறார்.