International
oi-Prasanna Venkatesh
அமெரிக்கா – ஈரான் அமைதி பேச்சுவார்த்தையில் இஸ்ரேல் தெற்கு லெபனானில் இருந்து முழுமையாக விலகி, இஸ்ரேல் ராணுவத்தை மொத்தமாக வெளியேற்ற வேண்டும் என்ற நிலைப்பாடு எடுக்கப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வெளியேறாது என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) குட்ஸ் பிரிவின் தலைவர் எஸ்மாயில் காணி, இஸ்ரேல் தெற்கு லெபனானில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இல்லையெனில் 2000ஆம் ஆண்டில் இஸ்ரேல் அவமானப்பட்டு வெளியேறிய அதே நிலை மீண்டும் ஏற்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

காணியின் கடும் எச்சரிக்கை
ஈரான் அரசு ஊடகமான பிரஸ் டிவியில் வெளியான அறிக்கையின்படி, குட்ஸ் படைத் தலைவர் எஸ்மாயில் காணி, இஸ்ரேல் தொடர்ந்து தெற்கு லெபனானில் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டால், இஸ்ரேல் நாட்டு படை அவமானம் மற்றும் தோல்வியுடன் வெளியேற்றப்படும் என்று எச்சரித்துள்ளார்.
அவர் கூறியதாவது: “நீங்கள் தெற்கு லெபனானில் இருந்து உங்கள் கால்களால் வெளியே வைக்காவிட்டால், 2000ஆம் ஆண்டின் சம்பவம் மீண்டும் நிகழும். நீங்கள் இந்த நிலத்தை அவமானத்துடன் விட்டு ஓடியது மறந்துவீட்டார்களா. விருப்பம் உங்களுடையது” என்று தெரிவித்துள்ளார்.
2000ஆம் ஆண்டு என்ன நடந்தது?
2000ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி, இஸ்ரேல் தெற்கு லெபனானில் இருந்து தனது ராணுவத்தை முழுமையாகவும், ஒருதலைப்பட்சமாகவும் வெளியேற்றியது. அப்போதைய இஸ்ரேல் பிரதமர் எஹுத் பராக், 22 ஆண்டுகாலமாக இஸ்ரேல் தெற்கு லெபனான் பகுதியை தன் வசம் வைத்திருந்ததை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
அப்போதைய இஸ்ரேல் பிரதமர் எஹூத் பராக், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இந்த முடிவை எடுத்தார். ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்த “புளூ லைன்” எல்லை வரை இஸ்ரேல் படைகள் பின்வாங்கின.
இந்த வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம், வடக்கு எல்லைப் பகுதியில் ஏற்பட்ட அதிகரித்த ராணுவ உயிரிழப்புகள் மற்றும் உள்நாட்டு அழுத்தம் ஆகும். இஸ்ரேல் 1985ஆம் ஆண்டு முதல் தெற்கு லெபனானில் 15 கிலோமீட்டர் அகலமான பாதுகாப்பு மண்டலத்தை (Security Zone) நிறுவியிருந்தது.
1985 முதல் வடக்கு இஸ்ரேல் நகரங்களை ராக்கெட் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், சுமார் 15 கிலோமீட்டர் அகலத்தில் பாதுகாப்பு மண்டலத்தை இஸ்ரேல் உருவாக்கியிருந்தது.
இஸ்ரேல் வெளியேறியதும், இஸ்ரேலின் உள்ளூர் பிரதிநிதி படையான சவுத் லெபனான் ஆர்மி (SLA) திடீரென வீழ்ந்தது. இதைத் தொடர்ந்து ஹிஸ்புல்லா அமைப்பு அந்தப் பகுதியின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றியது. இந்த நாளை லெபனானில் ஒவ்வொரு ஆண்டும் மே 25ஆம் தேதி ‘விடுதலை நாள்’ (Liberation Day) என்று கொண்டாடப்படுகிறது.
தற்போதைய சூழலில் இதன் முக்கியத்துவம்
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தெற்கு லெபனானில் உள்ள பாதுகாப்பு மண்டலத்தில் இஸ்ரேல் ராணுவம் வெளியேறாது என்று அறிவித்துள்ள நிலையில், குட்ஸ் படைத் தலைவரின் இந்த எச்சரிக்கை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது, அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட 60 நாள் ஒப்பந்த பாதையை மேலும் சிக்கலாக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. இஸ்ரேல் தனது நிலையை மாற்றாவிட்டால், அடுத்த கட்ட நிகழ்வுகள் எப்படி உருவாகும் என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.