தூத்துக்குடியில் நேற்று பகல் முழுவதும் அதிகமான வெயில் காணப்பட்டது. மாலையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. புறநகர் பகுதிகளான மறவன்மடம் முதல் வாகைகுளம் வரை மாலை சுமார் 4.45 மணி அளவில் திடீரென பலத்த காற்று வீசத் தொடங்கியது. விமானநிலையம் மற்றும் டோல்கேட் பகுதியில் காற்று வலுவடைந்து வீசத் தொடங்கியது.

மேகக்கூட்டத்திலிருந்து நேரடியாக தரையைத் தொட்டபடி சுழல்காற்றால் சிறிய மரங்கள் வேரோடு சாய்ந்தது. இதில் ஒரு மரம் தூக்கி வீசப்பட்டதில் டோல்கேட் கேபின்கள், அலுவலகம், கண்ணாடிகள், கம்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன. டோல்கேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த பேரிகார்டுகள் பறந்தன. காற்றினால் தூக்கி வீசப்பட்ட தகர ஷீட்டுகள் அங்கிருந்த மின் கம்பங்களில் விழுந்தன.