'என்னை கைது செய்துவிடுவார்கள் என்று குடும்பம் பயப்படுகிறது' இந்தியா வரும் அபிஜீத் திப்கே – எதற்கு?

Spread the love

சில நாள்களாக, இந்திய அரசியலை கலக்கிய ஒரு சொல் – ‘காக்ரோச் ஜனதா கட்சி’. ‘கரப்பான்பூச்சி’ என்ற சொல் பேசுபொருள் ஆனதற்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் காரணமாக இருந்தாலும், ‘காக்ரோச் ஜனதா கட்சி’ வைரலானதற்கு காரணம் அபிஜீத் திப்கே.

இவர் தற்போது நீட் வினாத்தாள் கசிவு பிரச்னையைக் கையிலெடுத்துள்ளார். இந்தப் பிரச்னையை முன்வைத்து இந்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமைதி வழியில் வருகிற ஜூன் 6-ம் தேதி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இது குறித்து அபிஜீத் திப்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியுள்ளதாவது…

“நான் ஜூன் 6, சனிக்கிழமை காலையில் டெல்லிக்கு வர முடிவு செய்துள்ளேன். தயவுசெய்து நீங்கள் அனைவரும் என்னோடு விமான நிலையத்தில் இணைந்து கொள்ளுங்கள்.

நாம் அனைவரும் ஒன்றாக நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்குச் சென்று, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி ஜந்தர் மந்தரில் ஒரு அமைதியான போராட்டம் நடத்துவதற்கான அனுமதியைக் கேட்போம்.

கடந்த சில நாள்களாகவே, தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று அனைவரும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம்.

தேர்வுத்தாள் கசிவு காரணமாக தற்கொலை செய்து கொண்ட நீட் மாணவர்களுக்காகவும், லட்சக்கணக்கான மாணவர்களின் வீணடிக்கப்பட்ட கடின உழைப்பிற்காகவும் நாம் இதைச் செய்கிறோம்.

இவ்வளவு பெரிய குளறுபடி நடந்த பிறகும் கல்வி அமைச்சர் இன்னும் பதவி விலகவில்லை என்றால், நம் நாட்டில் ‘பொறுப்புக்கூறல்’ என்ற ஒன்றே இல்லாமல் போய்விட்டது என்றுதான் அர்த்தம்.

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

இந்த சிஸ்டம் எவ்வளவு தவறுகள் வேண்டுமானாலும் செய்யலாம், அதற்கு எந்தவொரு தண்டனையோ அல்லது விளைவுகளோ இருக்காது என்பது போலத்தான் தோன்றுகிறது.

தவறுகளுக்கு எதிராக அமைதியான முறையில் குரல் எழுப்பும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியிருக்கிறது.

நான் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய உடனே என்னை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்து விடுவார்களோ என்று என் குடும்பத்தினரும் நண்பர்களும் பயப்படுகிறார்கள்.

ஆனால், நம் நாடு இன்றும் ஒரு ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்றும், அமைதியாகப் போராட நமக்கு நிச்சயம் அனுமதி கிடைக்கும் என்றும் நான் இன்னும் நம்புகிறேன்.

நான் ஒன்றை இங்கே தெளிவுபடுத்த விரும்புகிறேன் – நான் காந்தி, அம்பேத்கர், பகத் சிங் மற்றும் நேரு ஆகியோரின் தீவிரப் பற்றாளன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயகத்தில் நம் குரலை வெளிப்படுத்தும் உரிமையை நமக்கு வழங்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன்.

சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற பயத்தைப் பற்றிச் சொல்வதானால், நாம் இன்னும் எவ்வளவு காலம்தான் இப்படிப் பயந்து கொண்டே வாழப் போகிறோம்? இந்த நாடு எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் சொந்தமானது அல்ல.

இது நம் எல்லோருக்கும் சொந்தமானது. நம்முடைய எதிர்காலம் சீரழிக்கப்பட்டு வருகிறது. இந்த நாட்டில் யாருக்காவது ஓர் அநீதி நடக்கும்போது, நாம் அனைவரும் மிகவும் அமைதியான மற்றும் ஜனநாயக முறையில் அதற்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.”

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *